ஒரு எலெக்ட்ரிக் டூவீலரை பயன்படுத்துவது இத்தனை மரங்களை வளர்ப்பதற்கு சமமா? பேசமா ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்...
இளைஞர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியாவில் வாகன ஓட்டிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்பதுடன், வருங்காலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இந்த சூழலில் டெல்லியின் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், இளைஞர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இளைஞர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 'ஸ்விட்ச் டெல்லி' விழிப்புணர்வு பிரச்சாரம் 8வது மற்றும் கடைசி வாரத்தில் நுழையும் நிலையில், கைலாஷ் கெலாட் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் ஒரு பிரச்சாரம்தான் ஸ்விட்ச் டெல்லி.

குறிப்பாக தூண்களாக கருதப்படும் இளைஞர்கள் மத்தியில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு குறித்து, இந்த பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்ற முடியும் என அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறியுள்ளார்.

அத்துடன் இளைஞர்கள் தங்களது முதல் வாகனமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் எனவும் கைலாஷ் கெலாட் வலியுறுத்தியுள்ளார். மேலும் எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் டெல்லி அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாகவும், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும்போது இளைஞர்கள் உள்பட அனைவருக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் எனவும் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெட்ரோல் டூவீலருடன் ஒப்பிடும்போது ஒரு எலெக்ட்ரிக் டூவீலர் 1.98 டன் கார்பன் உமிழ்வை குறைக்கும் எனவும், இது 11 மரங்களை நடுவதற்கு சமமானது எனவும் கைலாஷ் கெலாட் கூறியுள்ளார். இந்தியாவில் டெல்லி மட்டுமின்றி, மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனவேதான் மத்திய அரசும், டெல்லி போன்ற மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.

அதே சமயம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையானது, இன்னும் 2 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலைக்கு இணையாக குறையும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அவ்வாறு விலை குறையும்பட்சத்தில், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க பலர் முன்வருவார்கள்.


Click it and Unblock the Notifications








