ஆஹா இது என்ன புது சோதனை... டீசல் தார் எஸ்யூவி கார்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... எதற்காக? இதோ முழு விபரம்
குறிப்பிட்ட கால கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட டீசல் எஞ்ஜின் கார்களில் பழுதான பாகத்தைப் பயன்படுத்திய காரணத்தினால் மஹிந்திரா நிறுவனம் டீசல் எஞ்ஜின் கொண்ட தார் கார்களை திருப்பி அழைத்துள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்களை இப்பதிவில் காணலாம்.

மஹிந்திரா நிறுவனத்தின் மிக சமீபத்திய அறிமுகங்களில் ஒன்று தார் எஸ்யூவி ரக கார். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நிறுவனம் தார் காரை கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

எதிர்பார்ப்பு நிலவி வந்ததைப் போலவே தற்போது இக்காருக்கான விற்பனையும் ஏகபோமாக கிடைத்து வருகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், விற்பனையில் நிறுவனத்தை தூக்கிப்பிடிக்கும் அளவிற்கு மிக சிறப்பான விற்பனையை இக்கார் பெற்று வருகிறது.

இந்த நிலையில் மிக சமீபத்திய அறிமுகமான இக்காரில் கோளாறான பாகம் ஒன்றை பயன்படுத்தியமைக்காக சுமார் 1,577 யூனிட் கார்களை திரும்பி வருமாறு மஹிந்திரா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. அழைக்கப்பட்டிருக்கும் அனைத்து யூனிட்டுகளுமே டீசல் எஞ்ஜின் கொண்ட தார் வேரியண்டாகும். ஆகையால், பெட்ரோல் தார் வாகன உரிமையாளர்கள் இந்த அழைப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என கூறப்படுகின்றது.

பழுதான கேம் ஷாஃப்ட்டினை பயன்படுத்திய காரணத்திற்காகவே தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பின் அடிப்படையில் பழுதான பாகம் நீக்கப்பட்டு, நல்ல இயங்கும் திறன் கொண்ட பாகம் மீண்டும் பொருத்தப்பட இருக்கின்றது. இதற்காகவே இந்த அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7ம் தேதி தொடங்கி டிசம்பர் 25 வரை உற்பத்தி செய்யப்பட்ட தார் கார்களிலேயே கோளாறான பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அந்தவகையில், குறிப்பிட்ட நாட்களுக்குள் தயாரிக்கப்பட்டு, தற்போது விற்பனையும் செய்யப்பட்டிருக்கும் கார்களையே நிறுவனம் அழைத்திருக்கின்றது.

இதுகுறித்து டீசல் எஞ்ஜின் தார் கார் உரிமையாளர்களை செல்போன் அழைப்பு, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் வாயிலாக நிறுவனம் அழைப்பு விடுத்து வருகின்றது. பாதிப்புக்குள்ளான கேம் ஷாஃப்டைக் கொண்ட எந்தவொரு வாகனமும் இதுவரை எந்த பிரச்னையையும் உருவாக்கவில்லை என மஹிந்திரா கூறுகின்றது.

இதற்கு முன்னதாகவே நடவடிக்கை எடுக்கும் விதமாக பழுதான பாகத்துடன் விற்பனைச் செய்யப்பட்ட டீசல் தார் கார்களை நிறுவனம் அழைத்திருக்கின்றது. மஹிந்திராவின் இந்த வருமுன் காக்கும் நடவடிக்கை அதன் உரிமையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தார் எஸ்யூவி கார் 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜினில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 132 எச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

தொடர்ந்து, 2.0 லிட்டர் டர்போசார்ஜட், டைரக்ட்-இன்ஜெக்சன் எம்ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்ஜினில் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த வேரியண்ட் அதிகபட்சமாக 152 எச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இதுதவிர கூடுதல் எஞ்ஜின் தேர்வுகளையும் தார் காரில் மஹிந்திரா வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை மஹிந்திரா தரப்பில் இருந்து வெளியாகவில்லை. ரூ. 12,10,338 என்ற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையாகும். அதேசமயம், இக்காரின் உச்சபட்ச விலை ரூ. 14,15,339 ஆக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








