அதிக மானியம், ஃபேம் இந்தியா-II திட்ட நீட்டிப்பு! பட்ஜெட்டில் மின்சார வாகன உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்புகள்
பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஃபேம் இந்தியா-II (FAME India-II) திட்டத்தின் கீழ், தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் இரு சக்கர மற்றும் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களுக்கு பேட்டரியை பொறுத்து மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு kWh-க்கும் தற்போதைய நிலையில் 10,000 ரூபாய் மானியம் கொடுக்கப்படுகிறது.

வெகு விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் இதனை ஒவ்வொரு kWh-க்கும் 20,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என எலெக்ட்ரிக் வாகன தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர். தற்போதைய நிலையில் ஃபேம் இந்தியா-II திட்டத்தின் கீழ், மின்சார பேருந்துகளுக்கு இந்த அளவிற்கான மானியம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஃபேம் இந்தியா-II திட்டத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனவும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது வரும் 2025ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் ஃபேம் இந்தியா-II திட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வந்தது. ஃபேம் இந்தியா-II திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அப்போது அறிவிக்கப்பட்டது. இதனைதான் தற்போது மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதன் முதலில் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபேம் இந்தியா-I திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட திட்டம்தான் ஃபேம் இந்தியா-II ஆகும். இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், 5 லட்சம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள், 55,000 எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 7,000 எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் அதிக சலுகைகளை வழங்குவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்த முடியும் எனவும், இதன் காரணமாக அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை சாலைக்கு கொண்டு வர முடியும் எனவும் எஃப்ஐசிசிஐ (FICCI - Federation of Indian Chambers of Commerce & Industry) கூறியுள்ளது.

எஃப்ஐசிசிஐ அமைப்பு தனது பட்ஜெட் பரிந்துரைகளில், நிதி அமைச்சகத்திற்கு இதனை தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு குறைத்து வருகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

ஃபேம் இந்தியா-II திட்டத்தின் கீழ் மானியம் உள்பட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏற்கனவே பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. எனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்கும் வகையில், வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் இன்னும் சில சலுகைகளை நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








