போச்சு எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் உயர போகுது!.. இனி எந்த வாகனத்தையும் வாங்க முடியாது போலிருக்கே!
வரும் காலத்தில் மின் வாகனங்களின் விலை உயர்வதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களைக் காட்டிலும் மின்சார வாகனங்கள் ஏற்கனவே அதிக விலையில் விற்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக பட்ஜெட் மற்றும் நடுத்தர மக்களால் மின் வாகனங்களை வாங்க முடியாத நிலை இந்தியாவில் தென்படுகின்றது. இந்த நிலையைப் போக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் ஃபேம் 2 திட்டத்தின் வாயிலாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியத்தை வழங்கி வருகின்றது.

இதுமட்டுமின்றி, மின் வாகனங்களின் மீது காணப்படும் விலை சுமையை மேலும் குறைக்கும் பொருட்டு அரசாங்கம் வரி மற்றும் பதிவு கட்டணங்களில் சலுகைகளை வழங்கி வருகின்றன. இருப்பினும், மின் வாகனங்களின் விலை சற்று அதிகமானதாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, மின்சார கார்கள் இந்தியாவில் ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என்ற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றன.

மேலே பார்த்தது டாடா டிகோர் இவி மின்சார காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ஆகும். இந்த விலைக்கு குறைவாக இந்தியாவில் எந்தவொரு மின்சார காரும் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், நடுத்தர மக்களின் எட்டக் கனியாக மின்சார கார்கள் இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்த நிலையை கூடுதல் கடுமையாக்கும் வகையில் மின்சார வாகனங்களின் விலை மேலும் பன் மடங்கு அதிகரிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசின் சலுகைகள் மற்றும் அண்மைக் காலங்களாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வின் காரணமாக மின்சார வாகனங்களின் விற்பனை சற்றே அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது.

குறிப்பாக, எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இவ்வாறு மின்சார வாகன விற்பனைச் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் இந்த மாதிரியான நேரத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை உயர இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிலும், மின் வாகன பிரியர்கள் மத்தியில் இந்த தகவல் கடும் வேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.

மின் வாகனங்களின் விலை உயர இருப்பது ப்ளூம்பெர்க் என்இஎஃப் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் வாயிலாகக தெரிய வந்திருக்கின்றது. இதோ அது வெளியிட்டிருக்கும் அறிக்கை பற்றிய முழு விபரம்; "கடந்த ஆண்டு 140 அமெரிக்க டாலர்களாக இருந்த ஒரு kWh திறன் கொண்ட பேட்டரி தற்போது 132 அமெரிக்க டாலர்களுக்கு குறைந்திருக்கின்றது. இதே ஒரு கிலோவாட் பேட்டரி 2010ம் ஆண்டில் 1,200 அமெரிக்க டாலர்களாக இருந்தன. மின் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பேட்டரிகள் தோராயமாக 118 அமெரிக்க டாலர்கள் வரையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன" என தெரிவித்துள்ளது.

வெயிட் பண்ணுங்க இதை பார்த்து ரொம்ப சந்தோஷப்படாதீங்க, மிக விரைவில் இவற்றின் விலையே அதிகரிக்க இருப்பதாக அது வெளியிட்டிருக்கும் அதே அறிக்கையில் தெரிவிச்சிருக்கு. லித்தியம் மற்றும் உயர் ரக மூல பொருட்களின் விலை அண்மைக் காலங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே வரவிருக்கும் ஆண்டுகளில் பேட்டரிகளின் பல விலை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகி இருக்கின்றன. இதையே தனது அறிக்கையின் வாயிலாக ஃப்ளூம்பெர்க் என்இஎஃப் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக முதலில் ஐரோப்பிய மின் வாகன சந்தையே பெரும் பாதிப்பை சந்திக்க இருக்கின்றது. அதேநேரத்தில், மின் வாகனஉற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தைக் குறைத்து, இந்த விலை உயர்வை உள்வாங்கிக் கொள்ளுமானால் மிகவும் லேசான பாதிப்புடன் இந்த விலையுயர்வு கடந்து செல்லவும் வாய்ப்பிருக்கின்றது.

அண்மையில் இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவோல்ட், அதன் பிரபல மின்சார பைக் மாடலான ஆர்வி400-இன் விலையைக் கணிசமாக உயர்த்தியது. உள்ளீடு மற்றும் தயாரிப்பு பொருட்களின் விலை உயர்ந்து வருவதனால் இந்த விலையை உயர்வை செய்வதாக நிறுவனம் தெரிவித்தது. ஏற்கனவே உள் எரிப்பு எந்திரம் கொண்ட வாகனங்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வரும் வேலையில் ரிவோல்ட் மின்சார பைக்கின் விலையும் உயர்த்தப்பட்டது இந்திய வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நிலையிலேயே ஒட்டுமொத்த மின் வாகனங்களின் விலையும் உயர இருப்பதாக தற்போது தகவல்கள் வெளி வர தொடங்கியுள்ளன. உலகின் முன்னணி நிறுவனங்கள் மிக விரைவில் முழுமையாக மின் வாகன உற்பத்திக்கு மாற இருப்பதாக அறிவிப்புகளை வெளியிட்டு வரும் வேலையில் இந்த மாதிரியான கசப்பான தகவல் வெளிவர தொடங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








