உலகின் முதல் பறக்கும் எலக்ட்ரிக் கார்களுக்கான ஓட்டப்பந்தயம்!! தெற்கு ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது!
இதுவரையில் இல்லாத புதுமையாக இரு முழு-எலக்ட்ரிக் பறக்கும் கார்களுக்கு இடையே ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினையும், இதுத்தொடர்பான சுவாரஸ்ய தகவல்களையும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தொழிற்நுட்பங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் நினைத்து பார்க்க முடியாத உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. தொழிற்நுட்பங்களின் இத்தகைய வளர்ச்சிக்கு இந்த எலக்ட்ரிக் பறக்கும் கார்களுக்கு இடையேயான ஓட்டப்பந்தயத்தை சிறந்த உதாரணமாக கூறலாம்.

ஏனெனில், இன்று சாலையில் இயக்கும் கார்கள் எதிர்காலத்தில் வானில் பறக்கும் என்று 30, 40 வருடங்களுக்கு முன்பு யாராவது கூறியிருந்தால், நம்மில் பெரும்பாலானோர் உடனடியாக நம்பியிருக்க மாட்டோம். ஆனால் இன்று அது எரிபொருள் இல்லாமல், எலக்ட்ரிக் மூலமாகவே சாத்தியமாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாத இறுதியில், தெற்கு ஆஸ்திரேலியாவில் பறக்கும் எலக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான இந்த போட்டி நடைபெற்றுள்ளது. உலகிலேயே முதல்முறையாக நடைபெறும் இந்த பறக்கும் எலக்ட்ரிக் கார்களின் போட்டிக்கு 'ஏர்ஸ்பீடர்'-இன் முதல் பகுதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது இவ்வாறான போட்டிகள் வருங்காலத்தில் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன.
இந்த போட்டியினை தெற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலடா ஏரோநாட்டிக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் வடிவமைத்து, தற்போது நடத்தி முடித்துள்ளது. இந்த போட்டியில் ஈடுப்படுத்தப்பட்ட இரு எம்கே3 கார்களின் அதிவேகம் எவ்வளவு என்பதை அலடா தொழிற்நுட்ப குழுவினர் கண்காணித்து வெற்றி, தோல்வியை நிர்ணயித்துள்ளனர்.
இந்த ஓட்டப்பந்தய போட்டி முழுக்க முழுக்க நட்புறவாக நடத்தப்பட்டதே ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட பாலைவன பகுதியில், வெறும் 300மீ தொலைவிற்கு மட்டுமே இந்த போட்டி நடத்தப்பட்டது. இருப்பினும், பறக்கும் எலக்ட்ரிக் கார்களை இயக்கிய பைலட்களுக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

போட்டியின்போது, பொறியாளர்கள் மற்றும் அனுபவமிக்க ரிமோட் சோதனை விமானிகள் அடங்கிய குழுக்கள் போட்டியில் ஈடுப்படுத்தப்பட்ட பறக்கும் முழு-எலக்ட்ரிக் கார்களின் கட்டுப்பாட்டை கவனித்தன. வீடியோவில், சிவப்பு நிற பறக்கும் முழு-எலக்ட்ரிக் காரை கவனித்து கொண்ட குழுவினருக்கு குழு பிராவோ என்றும், கருப்பு நிற வாகனத்தை கவனித்து கொண்ட குழுவினருக்கு குழு ஆல்பா எனவும் பெயர் வைக்கப்பட்டது.

இந்த போட்டி மொத்தம் எவ்வளவு நேரம் நடந்தது என கூறினால் உங்களால் நம்பவே முடியாது, வெறும் 3 நொடிகள் (300மீ-க்கு இதுவே அதிகம்). ஏர்ஸ்பீடரின் இந்த முதல் போட்டி உண்மையில், அடுத்த 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள எக்ஸா (EXA) எனப்படும் சர்வதேச போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஒத்திகை போன்றதாகும். இவ்வாறான பந்தயங்கள் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பிற்கு ஊக்கமளிக்கும்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க முதல் ஓட்டப்பந்தயந்தின் மூலம், எக்ஸா சீரிஸ் பேனரின் கீழ் முதல் எலக்ட்ரிக் பறக்கும் கார் போட்டியினை நடத்திய நிறுவனமாக அலாடா தன்னை அறிவித்து கொண்டுள்ளது. 2022இல் அரங்கேறவுள்ள எக்ஸா பந்தயங்களில் உலகம் முழுவதிலும் உள்ள பரந்த அளவிலான தொழிற்துறைகளில் இருந்து அணிகள் பங்கேற்க உள்ளன.


Click it and Unblock the Notifications








