Gurkha காரை புக் செய்தவர்களுக்கு குட் நியூஸ்... காரை டெலிவரி கொடுக்க தொடங்கிட்டாங்க! கிலியில் Mahindra Thar!
மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு போட்டியளிக்கும் வகையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி காரின் டெலிவரி பணிகள் இந்தியாவில் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் விற்பனையில் தனித்துவமான வெற்றி நடைபோட்டுக் கொண்டு மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி கார். இந்த காருக்கு தற்போது காத்திருப்பு ஒரு வருடங்களுக்கும் அதிகமான நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் காட்சியளிக்கின்றது. சிப் பற்றாக்குறை, மிக அமோகமான வரவேற்பு ஆகியவற்றின் காரணமாக காத்திருப்பு காலம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. ஆகையால், இப்போது புக் செய்தால் குறைந்தது 12 மாதங்களாவது காத்திருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

இந்த மாதிரியான அமோகமான வரவேற்பைப் பெற்று வரும் தார் எஸ்யூவி-க்கு போட்டியாக இந்தியாவில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் 2021 குர்கா எஸ்யூவி காரை இந்தியாவில் அண்மையில் விற்பனைக்குக் களமிறக்கியது. ஏற்கனவே இக்காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டெலிவரி பணிகளும் தொடங்கியிருக்கின்றன.

கடந்த மாதம் 27ம் தேதி அன்றே ஃபோர்ஸ் குர்கா இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது. அன்றைய தினமே புக்கிங் பணிகளும் விற்பனையாளர்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக தொடங்கின. ரூ. 13.59 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து குர்கா எஸ்யூவி விற்பனைக்குக் கிடைக்கும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு காத்திருப்பு காலம் பல மடங்கு உள்ளதால் சிலர் ஃபோர்ஸ் குர்காவின் பக்கம் தங்களின் பார்வையை திருப்பியிருக்கின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் போர்ஸ் மோட்டார்ஸ், புதிய குர்காவிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதாக தெரிவித்திருக்கின்றது. எனவே, மிக விரைவில் தங்களின் விற்பனையகங்களை விரிவாக்கும் செய்யும் பணியில் களமிறங்க இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

முன்னதாக, நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனைச் செய்யும் பொருட்டு ஆட்டோ ஐரோப்பா இந்தியா உடன் ஃபோர்ஸ் இணைந்தது. இந்நிறுவனம் நாட்டில் 6,200 வரையிலான டச் பாயின்டுகளை செயல்படுத்தி வருகின்றது. புதிய 2021 ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி, சொகுசு கார் மாடலான பென்ஸ் ஜி வேகன் காரின் ஸ்டைலை லேசாக தழுவி உருவாக்கப்பட்டிருக்கின்றது.

குர்காவின் முன்பக்க கிரில், வட்ட வடிவ பை-எல்இடி மின் விளக்கு மற்றும் எல்இடி டிஆர்எல்கள் ஆகியவற்றின் அமைப்பு இதை உறுதிப்படுத்துகின்றன. இத்துடன், புதிய பனிமின் விளக்கு ஜோடி, 16 இன்ச் அலாய் வீல், புதிய தோற்றம் கொண்ட வால் பகுதி மின் விளக்கு, மேற்கூரை மீது வைக்கப்படும் லக்கேஜை எளிதில் கையாள ஏணி அமைப்பு ஆகியவையும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதேபோல், 2021 ஃபோர்ஸ் குர்காவின் உட்பகுதியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. முழுமையான கருப்பு நிறம், 7 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி உடன்) டிரைவருக்கான செமி-டிஜிட்டல் திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பெரிய பனோரமிக் சன்ரூஃப், பின் இருக்கையாளர்களுக்கான ஜன்னல்களுக்கு பவர் வசதி மற்றும் மூன்று ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகியவையும் புதிய ஃபோர்ஸ் குர்காவில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் தற்போது பிஎஸ்6 தர 2.6 லிட்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வழங்கும் திறன் கொண்டது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைந்து இயங்கும். இத்துடன், அனைத்து வீல்கள் இயக்கம் தேர்வும் வழங்கப்படுகின்றது. இத்துடன், அதிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் அதிக அகலமான மற்றும் நீளமான உடல்வாகுடன் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மேலும், சி-இன்-சி சேஸிஸ் மற்றும் புதிய காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்கள் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இத்தகைய வசதிக் கொண்ட குர்கா காரையே மஹிந்திரா தார் எஸ்யூவி-க்கு போட்டியாக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. தற்போது இக்காருக்கான டெலிவரி பணிகளையும் நாட்டில் அந்நிறுவனம் தொடங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கார் டெலிவரி கொடுக்கும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளிவர தொடங்கியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








