ஃபோர்டின் இந்திய ஷோரூம்களில் நிற்கும் 1,000 கார்கள்!! 40,000 ஊழியர்களின் கதி என்ன?
இந்திய சந்தையில் மிக நீண்ட வரலாறை ஃபோர்டு கொண்டுள்ளது. 1990களிலேயே இந்திய சந்தையில் களம்புகுந்த வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஃபோர்டு உள்ளது.

எந்தவொரு விஷயத்திற்கும் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்ற ஒன்று இருக்க தானே செய்யும். ஃபோர்டால் கடந்த சில வருடங்களாக அதிகளவில் கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் இந்திய சந்தையில் இருந்து நடையை கட்டும் முடிவிற்கு இந்த பழமையான அமெரிக்க கார் பிராண்ட் வந்துள்ளது.

கடந்த 10 வருடங்களில் ஏறக்குறைய 2 பில்லியன் வரையிலான நஷ்டத்தை ஃபோர்டு சந்தித்துள்ளது. இந்தியாவை விட்டு செல்லும் முடிவிற்கு வந்த அடுத்த கணமே உள்நாட்டு விற்பனைக்கான ஃபோர்டு கார்களின் தயாரிப்பு பணிகள் அப்படி, அப்படியே நிறுத்தி கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு சந்தைகளுக்கான கார்கள் தயாரிக்கப்படுவது அடுத்த 2022ஆம் ஆண்டின் இரண்டாம் கால்பகுதியில் முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன. தங்களது இந்திய வெளியேற்ற முடிவால் அதிர்ச்சியில் உள்ள பணியாளர்கள், டீலர்கள், யூனியன்கள், விநியோகஸ்தரர்கள் மற்றும் பங்குதாரர்கள் உடன் நெருக்கமாக ஆலோசிப்போம் என ஃபோர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஃபோர்டின் இந்த முடிவு குறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுராக் மெஹ்ரோட்ரா உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக FADA தலைவர் விங்கேஷ் குலாடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்சமயம் ஃபோர்டு கார்களை பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என உறுதியளித்துள்ள ஃபோர்டு மோட்டார் நிறுவனம், எப்போதும் போல் வாடிக்கையாளர்களுக்கு சேவையினை வழங்க விரும்பும் டீலர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும் என கூறியுள்ளது.

இவ்வாறு டீலர்களுக்கான ஃபோர்டின் இந்த திட்டத்தை FADA வரவேற்றுள்ளது. ஏனெனில் இந்தியாவில் தற்சமயம் மொத்தம் 170 ஃபோர்டு டீலர்கள், 391 தொடு மையங்களுடன் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 40 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருவதாக FADA தெரிவிக்கிறது. இவற்றை நாடு முழுவதும் நிறுவுவதற்கு கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி வரையிலான தொகை செலவழிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பெரிய தொகையினை டீலர்கள் மீட்பது என்பது உண்மையில் நடக்காத விஷயமாகும். ஃபோர்டு டீலர்களை அடைய செய்யும் மற்றொரு விஷயம், 1,000 வாகனங்கள். தற்சமயம் இந்தியாவில் உள்ள ஃபோர்டு டீலர்களிடம் ஏறக்குறைய 1,000 கார்கள் ஸ்டாக்கில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தயாரிப்பு நிறுவனம் வெளியேறவுள்ளதால் இந்த 1,000 கார்களை விற்பனை செய்வது டீலர்களுக்கு மிக பெரிய சவாலாக இருக்கும். இது ஒரு பக்கம் கவலை என்றால், ஃபோர்டு டீலர்கள் இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ரூ.150 கோடி வரையில் கடன் வாங்கியுள்ளனர். அதை எவ்வாறு திரும்ப செலுத்த போகிறோமோ என்பது மறுபக்கம் அவர்களது தலையை இந்நேரம் குடைந்து கொண்டிருக்கும்.

1,000 விற்பனை கார்கள் இல்லாமல் சில டெமோ வாகனங்களும் ஃபோர்டு டீலர்ஷிப் மையங்களில் உள்ளன. சலுகைகள் & தள்ளுபடிகள் அறிவித்தாலும் இவற்றை வாங்க அவ்வளவாக யாரும் முன் வர மாட்டார்கள். பழமையான ஃபோர்டு டீலர்களாவது ஒரளவிற்கு இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

ஆனால் சமீபத்தில் டீலர்களாக அங்கரீக்கப்பட்டவர்கள் தான் இதில் நேரடியாகவும், பெரிதும் பாதிக்கப்பட உள்ளனர். கடைசியாக 5 மாதங்களுக்கு முன்பு புதிய டீலர்களை ஃபோர்டு நியமித்து இருந்தது. இவர்கள் பெரிய பொருளாதார நஷ்டத்தை சந்திக்கவுள்ளதாக FADA எச்சரித்துள்ளது.

FADA-வின் கூற்றுப்படி, வாகன உற்பத்தியாளர்களின் திடீர் வெளியேற்றங்கள் நாட்டில் பிரத்யேக உரிமையாளர் பாதுகாப்பு சட்டம் இல்லாததால் இருக்கலாம். முன்னதாக, ஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லி-டேவிட்சன், மேன் ட்ரக்குகள் மற்றும் யுஎம் லோஹியா போன்றவை இதேபோன்று ஓவர் நைட்டில் இந்தியாவை விட்டு நடையை கட்டும் முடிவை எடுத்திருந்தன.

இதனால் தான் உரிமையாளர் பாதுகாப்பு சட்டத்தை புதியதாக கொண்டுவர இந்திய அரசாங்கத்திற்கு FADA தொடர்ச்சியாக வேண்டுக்கோள் விடுத்த வண்ணம் உள்ளது. ஏனெனில் இவ்வாறான சட்டங்கள் ஏற்கனவே நமது அண்டை நாடான சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரேசில், மலேசியா மற்றும் இந்தோனிஷா போன்ற சில வெளிநாட்டு சந்தைகளில் அமலில் உள்ளன.


Click it and Unblock the Notifications








