ஃபோர்டு - மஹிந்திரா இடையிலான கூட்டு நிறுவன ஒப்பந்தம் கைவிடப்படுவதாக அறிவிப்பு!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இடையிலான கூட்டு நிறுவனத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் மஹிந்திராவுடன் இணைந்து வர்த்தகத்தை தொடர முடிவு செய்தது. இதற்காக, கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கார் உருவாக்கத்திற்கான முதலீடுகளை குறைத்து லாபத்தை அதிகரிக்கும் வகையில், இந்த கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டணியின் கீழ் பல்வேறு புதிய கார் மாடல்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன், பரஸ்பரம் தொழில்நுட்பம் மற்றும் கார் உருவாக்கப் பணிகளை பகிரந்து கொள்வதற்கும் திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இரு நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான காலக்கெடு நேற்று ( டிசம்பர் 31) முடிவடைந்தது. ஆனால், இரு நிறுவனங்களும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு விரும்பல்லை. மேலும், கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்வதற்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், இரு நிறுவனங்களும் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளன. இதனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி ஆரம்ப கட்டத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது.

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் வர்த்தகத்தை மஹிந்திரா கட்டுப்படுத்தும் வகையில் இந்த கூட்டணி அமைய இருந்தது. மேலும், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி அடிப்படையில் புதிய மிட்சைஸ் எஸ்யூவி ஃபோர்டு பிராண்டில் அறிமுகம் செய்யப்படுவதற்கான திட்டமும் இருந்தது. இதற்கான கார் உருவாக்கப் பணிகளும் நடந்து வந்தன.

மேலும், மஹிந்திராவின் எஞ்சின்களை ஃபோர்டு கார்களில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த கூட்டணி எதிர்பாராதவிதமாக முடிவுக்கு வந்துவிட்டது.

கொரோனா பிரச்னையால் எழுந்துள்ள பொருளாதார சவால்களை கருத்தில்கொண்டு, இந்த கூட்டணி நிறுவனத்தை அமைப்பதற்கான முயற்சிகளை கைவிடுவதாக ஃபோர்டு கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டபோது இருந்த சூழல் தற்போது இல்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனாவிற்கு பின்னர் நஷ்டத்தை ஏற்படுத்தும் பிரிவுகளை மஹிந்திரா மூடி வருகிறது. மேலும், தன் கட்டுப்பாட்டில் உள்ள தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை விற்பனை செய்வதற்கும் தீவிர முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ஃபோர்டு இந்தியா நிறுவனத்துடனான கூட்டணி செயல்பாடுகளையும் பொருளாதார நிலை கருதி மஹிந்திரா கைவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








