கொரோனா படுத்தும்பாடு... சென்னை ஃபோர்டு கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி நிறுத்தி வைப்பு!
கொரோனா பரவல் தீவிரத்தால், சென்னை ஃபோர்டு கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி இருப்பதோடு, உயிரிழப்புகளும் கவலைக்குரிய அளவில் இருந்து வருகிறது. இதனால், சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதுடன், அச்ச உணர்வுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, பொதுமுடக்கம் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல்கட்ட பொதுமுடக்கம் போதிய அளவில் பலன் தராத நிலையில், தற்போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

எனினும், வழிகாட்டு முறைகளுடன் பெரும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரும் கார் ஆலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாக கூறி கார் ஆலை பணியாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், ஹூண்டாய் மற்றும் ரெனோ - நிஸான் கார் ஆலைகளில் உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், சென்னையில் செயல்பட்டு வரும் ஃபோர்டு கார் நிறுவனத்தின் ஆலையும இன்றும், நாளையும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவும் வேகத்தை கருத்தில்கொண்டு பணியாளர்கள் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே 8 நாட்கள் உற்பத்திப் பணிகளை நிறுத்தி வைத்திருந்தது ஃபோர்டு நிறுவனம். கடந்த 24ந் தேதிதான் மீண்டும் ஆலையில் உற்பத்திப் பணிகளை துவங்கியது. ஆனால், பிற ஆலை தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் கொரோனா பிரச்னை காரணமாக, இந்த திடீர் முடிவை எடுத்துள்ளது.

இதனால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சற்றே கொரோனா அபாயத்திலிருந்து விடுபட்டுள்ளனர். எனினும், அரசு பொதுமுடக்கத்தை நீடிக்கும்பட்சத்தில், அதனை பொறுத்து சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆலைகளில் உற்பத்திப் பணிகள் துவங்குவது குறித்து கார் நிறுவனங்கள் பரிசீலித்து முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








