மீண்டும் விற்பனைக்கு வரும் Ford கார்... அந்த ஒரு மாடலை மட்டும் களமிறக்க திட்டம்! இணையத்தில் கசிந்த புது தகவல்!
அண்மையில் ஃபோர்டு (Ford) நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது. இதை அடுத்து நிறுவனத்தின் கார் மாடல்கள் அனைத்தும் விற்பனையில் இருந்து வெளியேறின. இந்த நிலையில் மீண்டும் நிறுவனம் ஒற்றை புகழ் வாய்ந்த மாடலை மட்டும் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

இந்தியர்களை சோகத்தில் ஆழ்த்தும் வகையில் ஃபோர்டு நிறுவனம் அண்மையில் நாட்டை விட்டு வெளியேறியது. உற்பத்தி மற்றும் விற்பனை என அனைத்து நடவடிக்கைகளையுமே நாட்டில் நிறுத்தியது, ஃபோர்டு. இதன் விளைவாக நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களான ஈகோஸ்போர்ட் (EcoSport) மற்றும் என்டீயோவர் (Endeavour) ஆகியவற்றின் வர்த்தகம் முழுமையாக நிறுத்தப்பட்டது.

இது இந்தியர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஆழ்த்தியது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கக் கூடிய ஓர் செய்தி இணையத்தின் வாயிலாக வெளி வந்திருக்கின்றது. ஆம், நிறுவனம் மீண்டும் ஃபோர்டு என்டீயோவர் காரை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து டீம் பிஎச்பி தளம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஃபோர்டு நிறுவனம் என்டீயோவர் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதால் இக்காரை சிபியூ எனப்படும் முழுமையாகக் கட்டியமைக்கப்பட்ட வாகனமாக இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஃபோர்டு நிறுவனம் என்டீயோவர் கார் உற்பத்தியை தாய்லாந்து, வியட்நாம் மற்றும் சைனா ஆகிய நாடுகளில் மேற்கொண்டு வருகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் என்டீயோவர் எவரெஸ்ட் எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதனையே ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

சிபியூ வாயிலாகக் கொண்டு வரப்பட இருப்பதால் ரூ. 60 லட்சம் வரையிலான அதிக விலையில் இக்கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வரும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரைக் காட்டிலும் இது அதிக விலையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஃபோர்டு என்டீயோவர் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் இக்காரை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ஃபோர்டு நிறுவனம் என்டீயோவர் காரை மட்டுமல்ல மஸ்டாங் மேக்-இ காரையும் இந்தியாவில் சிபியூ வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஆனால், இந்தியாவில் அதிகம் வரவேற்பைப் பெற்ற மாடலான ஈகோஸ்போர்ட் காரை நிறுவனம் இதுபோன்று சிபியூ வாயிலாக கொண்டு வருவதற்கான வாய்ப்பு துளியளவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபியூ வாயிலாக இந்தியாவில் இறக்குமதி செய்ய இருக்கும் ஃபோர்டு என்டீயோவர், முன்னதாக இந்தியாவில் விற்பனையில் இருந்த என்டீயோவர் காரைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பு வசதிகள் மற்றும் கட்டுமஸ்தான உடல்வாகைக் கொண்ட வாகனமாக விற்பனைக்கு வர இருக்கின்றது. இக்கார், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பை-டர்போ டீசல் எஞ்ஜின் கொண்ட வெர்ஷனாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த எஞ்ஜின் 211 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. பை-டர்போ எஞ்ஜினானது ஒற்றை டர்போ எஞ்ஜினைக் காட்டிலும் அதிக பவர்ஃபுல்லானது ஆகும். 10 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் மற்றும் வழக்கமான நான்கு வீல் இயக்கம் திறன் ஆகியவற்றை இது கொண்டிருக்கும்.

ஃபோர்டு நிறுவனத்தின் வெளியேற்றத்தால் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு காருக்கு பெரியளவில் போட்டியில்லாத நிலை உருவாகியிருக்கின்றது. இதனால், கடந்த சில தினங்களாக ஃபார்ச்சூனரின் விற்பனை சூடுபிடித்த வண்ணம் காட்சியளிக்கின்றது. இதற்கு மீண்டும் ஆப்பு வைக்கும் வகையில், அதாவது, மீண்டும் டஃப் கொடுக்கும் வகையில் ஃபோர்டு என்டீயோவர் விற்பனைக்கு வர இருக்கின்றது. எனவே, டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் விற்பனை லேசாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








