இந்தியாவில் உற்பத்தியை நிறுத்த முடிவு... ஃபோர்டு கார் வைத்திருப்பவர்கள் நிலைமை இனி என்ன ஆகும் தெரியுமா?
இந்தியாவில் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இனி ஃபோர்டு கார் வைத்திருப்பவர்களின் நிலை என்ன ஆகும்? என்ற குழப்பத்திற்கான பதிலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள இரண்டு ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்த போவதாக ஃபோர்டு இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக யூகங்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கார் விற்பனை சிறப்பாக இல்லாத காரணத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதையடுத்து, ஃபோர்டு இந்தியா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஃபோர்டு இந்தியா நிறுவனம் நடப்பு 2021ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் உற்பத்தியை நிறுத்தவுள்ளது. அதே நேரத்தில் தமிழக தலைநகர் சென்னைக்கு அருகே உள்ள தொழிற்சாலையில் வரும் 2022ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் இந்த முடிவு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் கிடைப்பது தொடர்பான சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள மாடல்களான ஃபிகோ, அஸ்பயர், ஈக்கோஸ்போர்ட், ஃப்ரீஸ்டைல் மற்றும் எண்டேவர் ஆகியவற்றின் விற்பனை, டீலர்களிடம் ஸ்டாக் தீர்ந்தபின் நிறுத்தப்படும்.

அதே நேரத்தில் இந்தியாவில் தற்போது உள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்வதற்கு உறுதி பூண்டுள்ளதாக ஃபோர்டு இந்தியா நிறுவனம் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. இதுகுறித்து ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜிம் ஃபேர்லி கூறுகையில், ''இந்தியாவில் உள்ள மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை ஃபோர்டு தொடர்ந்து கவனித்து கொள்ளும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் டீலர்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். இவர்கள் அனைவரும் ஃபோர்டு நிறுவனத்திற்கு மிக நீண்ட காலமாக ஆதரவு வழங்கியவர்கள்'' என்றார். ஃபோர்டு இந்தியா நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்தும் லாபம் ஈட்ட முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாறாக ஃபோர்டு இந்தியா நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக நஷ்டமே ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. அந்த நிறுவனத்தின் புதிய கார்களுக்கு போதிய அளவில் வரவேற்பு இல்லை. எனவேதான் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துவது என்ற முடிவை ஃபோர்டு இந்தியா நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்டு நிறுவனம் இந்திய கார் சந்தையில் கடந்த 1995ம் ஆண்டு நுழைந்தது. அப்போது மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டு ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. எனினும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் தனக்கென தனி பாதையை உருவாக்கி கொள்ள ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்தது.

ஐகான்தான் இந்திய சந்தையில் ஃபோர்டு நிறுவனத்தின் முதல் தனி தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஃபோர்டு ஐகான் கார் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்ற கார்களில் ஒன்றாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஃபோர்டு நிறுவன கார்களின் விற்பனை பெரிதாக சொல்லி கொள்ளும் வகையில் இல்லை. எனவே உற்பத்தியை நிறுத்துவது என ஃபோர்டு இந்தியா முடிவு செய்து விட்டது.

இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தி விட்டாலும், ஹை-எண்ட் மற்றும் மிகவும் முக்கியமான மஸ்டங் போன்ற தயாரிப்புகளை மட்டும் விற்பனை செய்வதற்கு ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. சிபியூ வழியில் இந்த தயாரிப்புகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். அதாவது கார் முழுவதும் கட்டமைக்கப்பட்டு, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.

இங்கு உற்பத்தி பணிகள் எதுவும் நடைபெறாது. எனவே மற்ற சாதாரண கார்கள் எதுவும் கிடைக்காது. இது ஃபோர்டு கார் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா ஒரு சில நிறுவனங்களுக்கு மிகவும் லாபகரமான சந்தையாக உள்ளது. எனவே வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் இந்தியாவிற்கு படையெடுத்து வருகின்றன.

கியா, எம்ஜி மோட்டார் போன்ற நிறுவனங்கள் இந்தியாவிற்கு சமீபத்தில் வந்தவைதான். அந்த நிறுவனங்களின் செல்டோஸ், சொனெட், ஹெக்டர் போன்ற எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் காம்பேக்ட் மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை புரிந்து கொண்டு, அந்த நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








