டிரைவரில்லா கார்களை பொதுச் சாலையில் இயக்க வகை செய்யும் புதிய சட்டம்... ஜெர்மனி அரசு அதிரடி!
டிரைவரில்லா கார்களை பொதுச் சாலையில் இயக்குவதற்கு வகை செய்யும் புதிய சட்டம் ஜெர்மனி பாராளுமன்றத்தின் கீழவை பச்சைக் கொட்டி காட்டி இருக்கிறது.

உலக அளவில் ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை உருவாக்கும் பணிகளில் பல்வேறு வாகன உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எனினும், இந்த கார்களை பொதுச் சாலையில் இயக்குவதற்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், டிரைவரில்லா கார்களில் பாதுகாப்பு கருதி, ஓட்டுனர் கண்காணிப்பில் இயக்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அண்மையில் சீனாவில் முழுமையாக ஓட்டுனர் இல்லா கார்களை குறிப்பிட்ட நகரத்தில் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சூழலில், தற்போது ஜெர்மனி அரசு டிரைவரில்லா கார்களை பொதுச் சாலைகளில் இயக்குவதற்கு சட்டம் இயற்றி உள்ளது. கடந்த வாரம் இந்த புதிய சட்டம் ஜெர்மனி பாராளுமன்றத்தின் கீழவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு பாராளுமன்றத்தில் இந்த சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, ஓட்டுனர் அமர்ந்து கண்காணிக்கும் அவசியம் துளியும் இல்லாமல் முழுமையான தானியங்கி தொழில்நுட்பத்தில் செல்லும் லெவல்-4 கார்களை பொதுச் சாலைகளில் அனுமதிக்க இந்த சட்டம் வகை செய்யும்.

அதேநேரத்தில், இந்த சட்டத்தின்படி குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்த டிரைவரில்லா கார்களை இயக்குவதற்கு அனுமதிக்கப்படும். ஆட்டோபான் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் இந்த கார்களை இயக்குவதற்கு வழி வகை இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

அதாவது, அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ரோபோ டாக்சி என்று அழைக்கப்படும் டிரைவரில்லா டாக்சி கார்களாக இவை இயக்க அனுமதிக்கப்படும். அதேபோன்று, நிறுவனங்களின் பணியாளர்களுக்கான போக்குவரத்து சேவை மற்றும், டெலிவிரிப் பணிகளுக்கும் இந்த கார்கள் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரோபோ டாக்சி கார்களுக்கு விசேஷ காப்பீடு பெற வேண்டும் என்று டாக்சி நிறுவனங்களுக்கு நிபந்தனை வைக்கப்படும். அதேபோன்று, ரிமோட் முறையில் இந்த கார்களை கண்காணித்து இயக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு முதல் ஜெர்மனியில் இந்த ரோபோ டாக்சி எனப்படும் டிரைவரில்லா வாடகை கார்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. பொதுச் சாலைகளில் முதல்முறையாக இந்த சேவையை கொண்டு வரும் நாடாக ஜெர்மனி மாறும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








