நிலவில் ஓட்டுவதற்கான காரை தயார் செய்யும் இரு முன்னணி நிறுவனங்கள்... 2 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம்...
இரு உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து நிலவில் பயணிப்பதற்கான ரோவர் ரக வாகனத்தை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் பூமியில் இயக்குவதற்கான வானங்களை உருவாக்கி வருகின்றவேலையில் இரு உலக புகழ்பெற்ற நிறுவனங்கள் சற்று விநோதமாக சந்திரனில் ஓட்டுவதற்கான காரை உருவாக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றன.

ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் லாக்ஹூட் மார்டின் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்தே நிலாவில் இயக்குவதற்கான ரோவர் ரக வாகனங்களை உருவாக்க இருக்கின்றன. இதற்காகவே இரு நிறுவனங்களும் தற்போது இணைந்திருக்கின்றன. இவ்விணைவைத் தொடர்ந்து நிலாவிற்கான ரோவர் வாகனத்தை வடிவமைக்கும் பணிகளை அவை தீவிரப்படுத்தியிருக்கின்றன.

இது ஓர் தானியங்கி வசதிக் கொண்ட மின்சார காராகும். இன்னும், இந்த வாகனத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பகட்ட நிலையிலேயே இருக்கின்றது. விரைவில் நாசாவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தை இறுதி பெற்ற உடன் வாகன உற்பத்தி தீவிரம் செய்யப்படும் என கூறப்படுகின்றது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் லூனார் ரோவர் வாகனங்களைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்லக் கூடியதாகவும், சிறப்பு திறன்களைக் கொண்டதாகவும் புதிய ரோவர் வாகனத்தை உருவாக்க ஜிஎம் மற்றும் லாக்ஹூட் மார்ட்டின் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அப்போலோ பயன்படுத்திய 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்வால்கர் ரோவர்கள் அதன் லேண்டர்களிடம் இருந்து வெறும் 7.6 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. இதனைக் காட்டிலும் சற்று வித்தியாசமான வாகனங்களையே இரு நிறுவனங்கள் உருவாக்க இருக்கின்றன.

நிலவிற்காக தயாராகி வரும் மின்சார வாகனம் ஒரே நேரத்தில் இரு விண்வெளி வீரர்களை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக ஜிஎம் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் ரைடர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தாங்கள் விரைவில் விண்வெளிக்கு அனுப்ப இருக்கும் ரோவர் எப்படி இருக்கும் என்பது பற்றிய விவரப் படங்களையும் அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

தேவைப்படும் நேரங்களில் தன்னிச்சையாக செயல்படும் வகையிலும் இந்த வாகனங்களை தாங்கள் உருவாக்கி வருவதாகவும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து, ஆபத்தான பகுதிகளை தானாக கண்டறிந்து அதனைத் தவிர்க்கும் வசதியும் ரோவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி மாதிரிகளை சேகரித்தல் மற்றும் நிலவில் இருக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகளுக்கும் இவ்வாகனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. கடந்த வருடம் நாசா, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ஓர் அழைப்பு விடுத்திருந்தது.

தாங்கள் 2024ம் ஆண்டிற்குள் மீண்டும் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டிருப்பதாக அந்த அழைப்பின் வாயிலாக நிறுவனங்களுக்கு தெரிவித்தது. அப்போதே புதிய ரோவர்களுக்கான கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதனடிப்படையிலேயே பல மடங்கு சிறப்பு வசதிகளைக் கொண்ட ரோவர் வாகனங்களை உருவாக்கும் பணியில் ஜிஎம் மற்றும் லாக்ஹூட் நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. புதிய ரோவர் வாகனத்தின் தயாரிப்பு பணிகள் இப்போதே ஆரம்பகட்டத்தில் இருப்பதால் இன்னும் வாகனம் பற்றிய பல்வேறு சிறப்பு தகவல்கள் வெளியிடப்படாமல் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








