கோவாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பஸ்களை பார்த்து ஏக்க பெருமூச்சு விடும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?
கோவாவில் புதிதாக எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவாவில் புதிதாக 30 எலெக்ட்ரிக் பஸ்களின் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களை கோவா மாநில முதல் அமைச்சர் பிரமோத் சவந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் மாவுவின் கோடின்ஹோ மற்றும் கடம்பா போக்குவரத்து கழக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் ஃபேம் இந்தியா II திட்டத்தின் கீழ், இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், மானியம் வழங்குவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளின் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இதன்கீழ்தான் கோவாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கோவா மாநிலத்தில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 30 எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருப்பது முதற்கட்டம்தான். இரண்டாவது கட்டமாக மேலும் 20 எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்படும் என கோவா மாநில முதல் அமைச்சர் பிரமோத் சவந்த் கூறியுள்ளார். கோவாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருவது, அம்மாநில மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவா முதல் அமைச்சர் பிரமோத் சவந்த் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்பட்டு வரும் மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்னைகளை எதிர்கொள்ளும் வகையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயலாற்றி வருகிறது.

இரண்டாவது கட்டமாக மேலும் 20 எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்படும்'' என்றார். இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு, அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

அத்துடன் பல்வேறு மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொது போக்குவரத்தை எலெக்ட்ரிக்மயமாக்கும் முயற்சிகள் கையில் எடுக்கப்பட்டுள்ளன. கோவா மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழகத்தில் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் எலெக்ட்ரிக் பஸ்கள் ஓட தொடங்கவில்லை என்பது நம் அனைவருக்கும் வருத்தமான ஒரு விஷயம்தான். எனினும் தேர்தலுக்கு பின் புதிதாக அமையும் அரசு தமிழகத்தில் எலெக்ட்ரிக் பஸ்களை அதிகளவில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் நாம் அனைவரும் நம்பலாம்.


Click it and Unblock the Notifications








