எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க புதிய பாலிசி... சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை உயர போகுது!
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான கொள்கையை கோவா மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது. இதன்படி வரும் 2025ம் ஆண்டிற்குள் 30 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என கோவா மாநில அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த கொள்கை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

இந்த கொள்கையின் கீழ், வரும் 2025ம் ஆண்டிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவா மாநில அரசானது, நகர பகுதிகளில் ஒவ்வொரு 3 கிலோ மீட்டருக்கும், நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களையும் அமைக்கவுள்ளது.

அத்துடன் கோவா மாநிலத்தில் அமைக்கப்படும் சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மின்சாரத்திற்கு மூலதன மானியமும் வழங்கப்படவுள்ளது. பெரிய திட்டங்கள் என்றால் 20 சதவீதமும், சிறிய திட்டங்கள் என்றால் 30 சதவீதமும், ஸ்டார்ட்அப் என்றால் 50 சதவீதமும் மானியமாக கொடுக்கப்படவுள்ளது.

எலெக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வர்த்தக வாகனங்களில் கோவா மாநிலத்தை சர்வதேச தரத்திற்கு மாற்றுவதுடன், ஒரு முன் மாதிரி மாநிலமாகவும் நிறுவுவதற்கு இந்த கொள்கையின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் விதமாக சார்ஜிங் ஸ்டேஷன் உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக தற்போது ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களது எலெக்ட்ரிக் வாகன கொள்கையை அறிவித்து வருகின்றன. இதன் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதுடன், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கப்பதற்கான திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னைக்கு முடிவு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கும் இது உதவி செய்யும். இதன் காரணமாகதான் இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதால் மக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம் விரும்ப தொடங்கியுள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடும் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி இதற்கு மிகவும் ஆதரவாக உள்ளார்.

அவர் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது ஹைட்ரஜனில் இயங்க கூடியது. பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இந்த காரில் வலம் வரப்போவதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி அதிரடியாக அறிவித்துள்ளார். இவர் ஆரம்பத்தில் இருந்தே மாற்று எரிபொருட்களுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








