கவலைய விடுங்க... ஃபாஸ்டேக் இல்லாவிட்டாலும் பொங்கலுக்கு காரில் ஊருக்கு போகலாம்!
ஃபாஸ்டேக் இல்லாமல் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் புக்கிங் செய்துவிட்டு, வந்துவிடுமா என்ற பதை பதைப்பில் உள்ளவர்களுக்கு இந்த செய்தி சற்றே நிம்மதி தருவதாக உள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.

நாடுமுழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலை இருந்து வருகிறது. இதனால், பெரும் எரிபொருள் விரயமும், கால விரயமும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில், ஃபாஸ்டேக் அட்டை மூலமாக மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு ஏற்கனவே காலக்கெடு விதிக்கப்பட்டு படிப்படியாக முழுமையாக அமலுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது.

இந்த நிலையில், சுங்கச் சாவடிகளில் நேரடியாக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை தவிர்க்கப்பட்டு, இன்று முதல் ஃபாஸ்டேக் மூலமாகவே கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பல வாகனங்கள் கடைசி நேரத்தில் ஃபாஸ்டேக் அட்டை விண்ணப்பித்து காத்திருப்பதாலும், அவசர விஷயங்களுக்காக நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை கருத்தில்கொண்டும் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் 15ந் தேதி வரை அபராதமில்லாமல் சாதாரணக் கட்டணத்தை செலுத்தி செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, முழுமையாக ஃபாஸ்டேக் முறை அமலுக்கு கொண்டு வரப்படும்.

வாகனங்களுக்கு வழங்கப்படும் ஃபாஸ்டேக் எனப்படும் மின்னணு அட்டையில் ஒவ்வொரு வாகனத்திற்கும் பிரத்யேக குறியீடு கொடுக்கப்பட்டு இருக்கும். வாகனங்கள் சுங்கச் சாவடியை கடக்கும்போது, அங்குள்ள சென்சார்கள் ஃபாஸ்டேக் அட்டை குறியீட்டை வைத்து நெடுஞ்சாலை பயன்பாட்டு கட்டணத்தை ஃபாஸ்டேக் கணக்கு இணைக்கப்பட்டு இருக்கும் வங்கிக் கணக்கு அல்லது வாலட்டிலிருந்து தானியங்கி முறையில் கட்டணத்திற்கு உரிய பணத்தை எடுத்துக் கொள்ளும்.

இதனால், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையும், எரிபொருள் விரயமும் தவிர்க்கப்படும். பேடிஎம், வங்கிகள், சுங்கச் சாவடிகளில் உள்ள அலுவலங்கள் மூலமாக ஆன்லைனிலும், நேரடியாகவும் ஃபாஸ்டேக் அட்டையை எளிதாக விண்ணப்பித்து பெற முடியும்.

அடுத்த மாதம் 15ந் தேதி வரை சுங்கக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தியும் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால்,o சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோருக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications








