மத்திய அரசின் உதவியால் ஏற்றுமதிகளை அதிகப்படுத்தும் ஹோண்டா!! மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் சிட்டி கார்கள்
இந்தியாவில் இருந்து இடதுகை ட்ரைவிங் கொண்ட ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி செடான் கார்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இடதுகை ட்ரைவ் கொண்ட நாடுகளுக்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாம் தலைமுறை சிட்டி கார்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யவுள்ளதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

ஹோண்டா நிறுவனம் இடதுகை ட்ரைவிங் கொண்ட கார்களை இந்தியாவில் தயாரித்து வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா' முயற்சி மிக முக்கிய காரணம் எனலாம்.

2020 ஹோண்டா சிட்டி கார்களின் முதல் தொகுப்பு சென்னை, எண்ணூர் துறைமுகம் மற்றும் குஜராத் பிபாவாவ் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இடதுகை-ட்ரைவ் சிட்டி கார்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது இதுதான் முதல்முறை.

ஆனால் வலதுகை-ட்ரைவ் 2020 ஹோண்டா சிட்டி கார்கள் கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கும், 2020 அக்டோபரில் இருந்து நேபாளம் & பூடான் போன்ற நமது அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி செடான் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் 1.5 லிட்டர் (டிஒஎச்சி) இரட்டை ஓவர்-ஹெட் காம் என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

அதுவே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த இரு என்ஜின்களுடனும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

சிட்டி செடான் கார்கள் மட்டுமின்றி அமேஸ், டபிள்யூஆர்-வி மற்றும் பழைய தலைமுறை சிட்டி கார்களையும் நேபாளம், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஹோண்டா நிறுவனம் ஏற்றுமதி செய்துவருகிறது. இந்த வரிசையில் புதியதாக இடதுகை-ட்ரைவ் சிட்டி காரும் இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








