கோவிட்-19 தீவிரம்... ஹோண்டா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு... கார்களின் காத்திருப்பு காலம் உயரலாம்...
கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஹோண்டா கார் நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராஜஸ்தான் மாநிலம் தபுகெரா பகுதியில் உள்ள ஆலையை தற்காலிகமாக மூடுவதாக ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக மொத்தம் 12 நாட்களுக்கு தபுகெரா கார் ஆலை மூடப்பட்டிருக்கும். மே 7ம் தேதி முதல் (இன்று) வரும் மே 18ம் தேதி வரையில், ஆலையை மூடுவதற்கு ஹோண்டா கார் இந்தியா முடிவு செய்துள்ளது.

ஹோண்டா கார் ஆலை மூடப்படுவது, கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் உதவி செய்யும். தபுகெரா ஆலையை பராமரிப்பு பணிகளுக்காக வரும் மே மாத மத்தியில் மூடலாம் என்றுதான் முதலில் ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் முடிவு செய்திருந்தது. எனினும் தற்போது ஒரு வார காலத்திற்கு முன்பாகவே ஆலையை மூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா கார் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் செயல்பட்டு வந்த ஆலையை மூடியது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ராஜஸ்தான் மாநிலம் தபுகெராவில் செயல்பட்டு வந்த ஆலை தொடர்ந்து இயங்கி வந்த நிலையில், அதனை தற்போது தற்காலிகமாக மூடுவதற்கு ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தபுகெரா ஆலையில் ஒரு ஆண்டுக்கு 1.8 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு முன்னதாக எம்ஜி மோட்டார் இந்தியா, மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது ஆலைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 இரண்டாவது அலை காரணமாக பல நிறுவனங்களும் தங்களது ஆலைகளை மூடி வருகின்றன.

இதன் காரணமாக இந்தியாவில் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கார்களின் காத்திருப்பு காலம் உயர்வதற்கும் இது ஒரு காரணமாக அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது மூடப்பட்டுள்ள ஹோண்டா கார் நிறுவனத்தின் தபுகெரா ஆலை வரும் மே 19ம் தேதியன்று திறக்கப்படவுள்ளது.

முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு கோவிட்-19 முதல் அலை காரணமாக இந்தியாவில் கார் உற்பத்தி மற்றும் விற்பனை பணிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. அதேபோன்றதொரு நிலை தற்போது மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கோவிட்-19 இரண்டாவது அலை தவிர, செமி-கண்டக்டர்கள் பற்றாக்குறை பிரச்னையாலும் கார் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் செமி-கண்டக்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை முடிவடைவதற்குள் இந்தியாவில் கோவிட்-19 இரண்டாவது அலை பிரச்னை ஏற்பட்டு விட்டது.

இதனால் தற்போது இந்த இரண்டு பிரச்னைகளையும் சேர்த்தே எதிர்கொண்டாக வேண்டிய சூழலில், கார் உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக கார்களின் காத்திருப்பு காலம் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. புதிய கார்களை முன்பதிவு செய்து விட்டு டெலிவரி பெற காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








