கார் விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்த ஹோண்டா... காரணம் என்னனு தெரியுமா?
ஹோண்டா நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2021ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை ஹோண்டா கார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய சந்தையில் கடந்த ஜனவரி மாதம் ஹோண்டா நிறுவனம் 11,320 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டால், விற்பனையில் இது 113.6 சதவீத வளர்ச்சியாகும்.

ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 5,299 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு ஜனவரி மாதம் விற்பனை அப்படியே இரட்டிப்பாகியுள்ளது. அதே சமயம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் 8,638 கார்களை விற்பனை செய்துள்ளது.

எனவே 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டாலும் கடந்த ஜனவரியில் ஹோண்டா நிறுவன கார்களின் விற்பனை 31 சதவீதம் உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ், போட்டியாளர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை சந்தித்திருந்த ஹோண்டா நிறுவனத்திற்கு இந்த வளர்ச்சி மிகவும் அவசியமான ஒன்று.

கடந்த ஜனவரி மாதம் ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு புத்தாண்டு தள்ளுபடிகளை வாரி வழங்கியது. விற்பனையில் ஹோண்டா நிறுவனம் பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்துள்ளதற்கு இதுவே மிக முக்கியமான காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது.

இதில், அமேஸ், ஜாஸ், சிட்டி (4வது மற்றும் 5வது தலைமுறை மாடல்கள்) மற்றும் டபிள்யூஆர்-வி ஆகிய கார்கள் முக்கியமானவை. ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான மாடல்களாக இருந்த சிவிக் மற்றும் சிஆர்-வி ஆகிய இரண்டு கார்களும் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால், கிரேட்டர் நொய்டாவில் செயல்பட்டு வந்த ஆலையை ஹோண்டா கார் நிறுவனம் மூடியது. இதை தொடர்ந்து சிவிக் மற்றும் சிஆர்-வி ஆகிய 2 கார்களின் விற்பனையும் இந்தியாவில் நிறுத்தப்பட்டு விட்டது. எனினும் இந்த 2 கார்களும் ஹோண்டா நிறுவனத்தின் இணையதளத்தில் இன்னமும் பட்டியலிடப்பட்டுள்ளன.

பழைய ஸ்டாக் கைவசம் இருக்கும் வரை இந்த 2 கார்களும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். ஹோண்டா கார் நிறுவனம் இந்தியாவில் தற்போது தனது வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பு அனைவரும் அறிந்ததுதான். அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு இந்த செக்மெண்ட்டில் புதுப்புது தயாரிப்புகளை களமிறக்கி வருகின்றன. இந்த வரிசையில் ஹோண்டாவின் புதிய தயாரிப்பு ஒன்றும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








