தீவிரம் காட்டும் கொரோனா! கார்களுக்கான மாஸ்கை அறிமுகப்படுத்திய ஹோண்டா... காருக்கான மாஸ்கா! என்னனு பார்க்கலாம்!!
கார்களுக்கான மாஸ்கை பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாஸ்க் பற்றிய கூடுதல் சிறப்பு தகவல்களை இப்பதிவில் காணலாம்.

மீண்டும் தனது தீவிர தன்மையைக் காட்டத் தொடங்கியிருக்கின்றது கொரோனா வைரஸ் (கோவிட்-19). முன்பை விட அதிக வீரியத்துடன் உருமாற்றமடைந்த வைரஸாக அது தற்போது உலகை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கின்றது. இதனால், பிரிட்டன் பிரதமர் ஜான் போரிஸ் இந்திய வருகை ரத்து, சில நாடுகளில் மீண்டும் முழுமையான லாக்டவுண் என பல்வேறு சிக்கல்கள் நிலவ ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் கொரோனா அச்சத்தைப் போக்கும் விதமாக கார்களுக்கான மாஸ்க் ஒன்றை பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. காருக்கான மாஸ்க் என்ற உடன் அது மிகப்பெரிய கவராக இருக்குமோ என எண்ணிக்கொள்ள வேண்டாம். பிரத்யேக காற்று வடிகட்டியையே (ஏர் ஃபில்டர்) நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது.

ஜப்பான் நாட்டினை மையமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா கார் உற்பத்தி நிறுவனமே வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய ஏர் ஃபில்டரை அறிமுகம் செய்த நிறுவனம் ஆகும். இந்த புதிய கருவிக்கு குருமாகு (Kurumaku) என்ற பெயரை அது வைத்திருக்கின்றது. இந்த கருவி காரின் கேபினுக்குள் இருக்கும் காற்றை தூய்மைப்படுத்த உதவும்.

ஆகையால், பயணத்தின்போது வைரஸ் பயமின்றி பயணிக்க முடியும். குறிப்பாக, தற்போது வைரஸ் பரவலால் திக்கமுக்காடி வரும் நாட்டு மக்களுக்கு இந்த கருவி மிகுந்த பயனளிக்கும் என தெரிகின்றது. இதனை ஜப்பான் நாட்டிலேயே ஹோண்டா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் உலக நாடுகளில் ஸ்பெஷல் அக்சஸெரீஸ்களின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கருவிக்கு 6,400 யென் என்ற விலையை ஹோண்டா நிர்ணயித்துள்ளது. இதற்கு இந்திய மதிப்பில் 4,500 ரூபாய் ஆகும். இது தோராயமான மதிப்பு மட்டுமே ஆகும். இந்த விலையிலேயே கிருமிகளை அழிக்கும் ஏர் ஃபில்டரை ஹோண்டா அறிமுகம் செய்திருக்கின்றது.

இது காற்றில் கலந்திருக்கும் கிருமிகளை வெறும் 15 நிமிடங்களில் அழித்துலவிடும். 99.8 சதவீதம் வரை அழிக்கும் என கூறப்படுகின்றது. மேலும், என்95 மாஸ்க்கைப் போல் அது செயல்படும் என நிறுவனம் உத்தரவாதம் அளித்திருக்கின்றது. எனவேதான் இந்த கருவியைப் பலர் காருக்கான மாஸ்க் என்று செல்லமாக அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

தற்போது நிலவி வரும் கொரோனா அச்ச காலத்தில் இதுபோன்று கருவிகளே மக்களின் தேவையாக இருக்கின்றது. எனவே ஹோண்டாவின் இந்த அறிமுகம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








