பெட்ரோல், டீசல் கார்களுக்கு குட்பை... அதிரடி திட்டத்தை வகுத்த ஹோண்டா!
பெட்ரோல், டீசல் கார்களை சந்தையிலிருந்து படிப்படியாக விலக்குவதற்கான திட்டத்தை ஹோண்டா அறிவித்துள்ளது. மேலும், எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை படிப்படியாக அதிகரித்து 100 சதவீதம் அளவுக்கு மாறும் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.

ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டா உலக அளவில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக இருந்து வருகிறது. மேலும், ஹோண்டாவின் பெட்ரோல எஞ்சினுக்கு உலக அளவில் பெரும் ரசிக பட்டாளமும் உண்டு. இந்த நிலையில், வாகனத்தினால் ஏற்படும் மாசு உமிழ்வை குறைக்கும் நடவடிக்கைகளை கருத்தில்கொண்டு முழுமையான மின்சார கார் உற்பத்தி நிறுவனமான மாறுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஹோண்டா கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தோஷிஹிரோ மைப் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார். அப்போது,"மாசு உமிழ்வு இல்லாத வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான பொறுப்பு வாகனத் தயாரிப்பாளர்களுக்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.

இந்த இலக்கை நோக்கி நகர்வதற்கான திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். வரும் 2030ம் ஆண்டுக்குள் எங்களது கார்களில் 40 சதவீதம் மின்சார மாடல்களாகவும், 2035ம் ஆண்டுக்குள் இதனை 80 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

வரும் 2040ம் ஆண்டு முதல் முழுமையாக பேட்டரியில் இயங்கும் மின்சார கார்கள் மற்றும் ஹைட்ரஜனில் இயங்கும் ஃப்யூவல் செல் கார்களை மட்டுமே விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன்மூலமாக, மாசு உமிழ்வு இல்லாத வாகனத் தயாரிப்பில் எங்களது இலக்கு எட்டப்படும் என்று கருதுகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இந்த இலக்கை அடைவதற்கு ஹோண்டா திட்டம் வகுத்துள்ளது. இதனிடையே, வரும் 2030ம் ஆண்டுக்குள் 46 சதவீதம் அளவுக்கு மாசு உமிழ்வு குறைப்பு திட்டத்தை ஜப்பான் எட்டுவதற்கு இலக்கு வைக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் யோஷின்டே சுகா வலியுறுத்தி இருந்தார்.

இதைத்தொடர்ந்து, ஹோண்டா கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தங்களது மின்சார வாகன உற்பத்தி திட்டத்தை வெளியிட்டுள்ளார். மேலும், அரசு நிர்ணயித்துள்ள மாசு உமிழ்வு குறைப்புத் திட்டத்தை எட்டுவதில் சிரமமானது. ஆனால், ஹோண்டா நிறுவனம் 46 சதவீத மாசு உமிழ்வு குறைப்பு திட்டத்திற்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார கார் தயாரிப்பு மற்றும் புதிய கார் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய முதலீட்டை செய்ய இருப்பதாகவும் ஹோண்டா அறிவித்துள்ளது. வருவாய் ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், இந்த இலக்கை அடைவதற்காக முதலீட்டை செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








