திருட்டு அதிகமா நடக்குது! இதுக்கு தீர்வே இல்லையா? கவலைய விடுங்க இத ஃபாலோ பண்ணுங்க... வண்டி பத்திரமா இருக்கும்!
வாகன திருட்டை தவிர்ப்பதற்கான டிப்ஸை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் என்ன செய்தால் நம் வாகனங்களைப் பாதுகாக்க முடியும் என்பதை இதில் காணலாம்.

ஆசை ஆசையாக வாங்கப்படும் கார்கள் ஒரே நாள் இரவில் காணமல் போன சம்பவங்கள் கூட நம் நாட்டில் அரங்கேறியிருக்கின்றன. அதிலும், சமீப காலமாக வாகன திருட்டுகள் மிக அதிகளவில் நடைபெற்று வருகின்றது. இதனைத் தவரிக்க வழியே இல்லையா?, என நினைப்பவர்களுக்கு டிப்ஸ் வழங்கும் விதமாகவே இந்த பதிவை நமது டிரைவ்ஸ்பார்க் குழு வெளியிடுகின்றது. வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

பாதுகாப்பான பார்க்கிங்:
பொதுவாகவே முறையான பார்க்கிங் வசதி இல்லாத இடங்களில் இருந்தே வாகனங்கள் அதிகளவில் காணமல் போகின்றன. ஆகையால், உங்களுடைய கார்களை நிறுத்த பாதுகாப்பான வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்துவது மிக சிறந்தது. பார்க்கிங் இடங்கள் அதிக பாதுகாப்பானவை என்பதால் அங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் களவுபோவது என்பது மிக மிக அரிது.

ஆகையால், திறந்த வெளி மற்றும் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதைவிட அருகாமையில் இருக்கும் பாதுகாப்பான பார்க்கிங் ஏரியாவில் வாகனங்களை பார்க் செய்யுங்கள். இது நிச்சயம் உங்களின் விலையுயர்ந்த வாகனத்தை திருட்டில் இருந்து பாதுகாக்கும்.

கார் அலாரம்:
திருட்டை தவிர்ப்பதற்காக அலாரம் பயன்படுத்துவது மிக பழைய ஸ்டைலாக இருந்தாலும் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களைப் பாதுகாக்க இது மிக உதவியாக இருக்கும். இது அதிக ஒலியை எழுப்பும் என்பதால் உங்களால் கவனிக்க முடியவில்லை என்றாலும் அருகாமையில் இருப்பவர்களை நிச்சயம் தட்டி எழுப்பிவிடும்.

அவ்வாறு எழுப்பப்பட்ட ஓர் நபர் வெளியே வரும்பட்சத்தில், திருடர்களே அச்சப்படுத்த உதவும். வாகன உரிமையாளர்கள்தான் வந்துவிட்டதாக எண்ணி திருட்டை கைவிட்டு அவர்கள் ஓடுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும். அதேசமயம், இது பழைய முறை என்பதை நாம் கவனித்தில் கொள்ள வேண்டும். தற்போது புதிய நவீன ரக அலாரம்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இது, நேரடியாக செல்போனுக்கு அழைப்பு அல்லது குறுஞ்செய்தியை அனுப்பி வைக்கும்.

இதன்மூலம் கார் திருட்டை உடனடியாக அறிந்து அதனை அவர்களால் தவிர்க்க முடியும். ஆனால், அலாரத்தையும், அழைப்பையும் முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன், அதனால், அதனை தவறவிட்டுவிட்டேன் என்றால் நிர்வாகம் பொறுப்பல்ல. அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாக முடியும்.

சிசிடிவி கேமிரா:
கார் நிறுத்துமிடத்தில் சிசிடிவி கேமிரா பொருத்துவது அல்லது சிசிடிவி கேமிராக்கள் இருக்கும் இடத்தில் கார்களை நிறுத்துவது இவை இரண்டுமே மிக சிறந்தது. பெரும்பாலான வாகன கொள்ளையர்கள் கேமிரா வேலைச் செய்கின்றதோ, இல்லையோ, அவை அந்த பகுதியில் இருக்கின்றது என தெரிந்தாலே எட்டிகூட பார்க்க மாட்டார்கள் என சில தரவுகள் குறிப்பிடுகின்றன.

இருப்பினும், சிசிடிவி கேமிராவின் பார்வையில் இருக்கும்போது காரை திருடுவோர்களும் இருக்கின்றனர். இவர்கள் கேமிராவில் பதிவாகிவிடுவதால் மிக எளிதில் இனம் காண முடியும். மேலும், வாகனத்தையும் மீட்டெடுக்க முடியும். எனவேதான் சிசிடிவி கேமிரா இருக்கும் இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என போலீஸார் தொடங்கி அநேகர் அறிவுருத்துகின்றனர். இந்த கேமிராக்கள் ரூ. 2 ஆயிரம் தொடங்கி ரூ. 18 ஆயிரம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

ஜிபிஎஸ் டிராக்கர்:
ஜிபிஎஸ் டிராக்கர் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்தால் வாகனம் திருடப்பட்டிருந்தாலும் உடனடியாக கண்டுபிடித்துவிட முடியும். குறிப்பாக, வாகனம் அந்த நேரத்தில் எந்த சாலையில், எந்த பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது என்பது வரையிலான அனைத்து தகவல்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். இந்த சிறப்பு வசதிக் கொண்ட ஜிபிஎஸ் டிராக்கர்கள் ரூ. 6 ஆயிரம் முதல் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

ஸ்டியரிங் லாக் மற்றும் கியர் லாக்:
காரை ஓட்டுவதற்கான தேவையான மிக முக்கியமான அம்சங்களாக ஸ்டியரிங் வீலும், கியர் லாக்கும் இருக்கின்றன. இவற்றை லாக் செய்யக் கூடிய கருவிகள் தற்போதும் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு லாக் செய்யும்பட்சத்தில் வாகனத்தை இயக்குவது மிக கடுமையான ஓர் செயலாக மாறும்.

குறிப்பாக, இவற்றை உடைத்து எறிய முடியாது என்பது இக்கருவிகளின் கூடுதல் சிறப்பு. ஆகையால், சற்று கூடுதல் செலவு ஏற்பட்டாலும், நல்ல தரமான லாக்கர்களை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. இதன்மூலமும் வாகன திருட்டை தவிர்க்க முடியும். இந்த கருவிகள் ரூ. 2 ஆயிரம் முதல் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

2019ம் ஆண்டைக் காட்டிலும் 2020ம் ஆண்டில் வாகன திருட்டு மிகக் கடுமையாக உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், வாகனங்களைப் பாதுகாப்பது நம்முடைய தலையாய கடமையாக மாறியிருக்கின்றது. மேலே கூறிய வழிகளைக் கடைப்பிடித்தால் நிச்சயம் வாகன திருட்டை ஒழிக்க முடியும். ஒரு வேலை வாகனம் திருடப்பட்டாலும் உடனடியாக அவற்றைக் கண்டுபிடிக்க மேலே கூறப்பட்ட தொழில்நுட்பங்களும் வழிமுறைகளும் நமக்கு உதவும்.


Click it and Unblock the Notifications








