இந்த காருக்கு சூரிய ஒளிதான் முக்கியம்... உலகின் முதல் சோலார் பேனல் வசதி கொண்ட மின்சார எஸ்யூவி கார்...
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஹம்பிள் நிறுவனம் சோலார் பேனல் வசதிக் கொண்ட மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஹம்பிள் மோட்டார்ஸ். இந்நிறுவனம் ஓர் ஆரம்பநிலை வாகன தயாரிப்பு நிறுவனம் ஆகும். கலிஃபோர்னியா மாகாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனமே, சூரிய ஒளியால் இயங்கும் எஸ்யூவி ரக காரை உருவாக்கியிருக்கின்றது.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா, லூசிட், ஃபராடே ப்யூச்சர், லூசிட் மற்றும் ஃபிஸ்கர் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே மின்சார வாகன சந்தையில் புரட்சியைச் செய்து வருகின்றன. இந்த நிலையில் இந்நிறுவனங்களின் வரிசையில் புதிதாக ஹம்பிள் மோட்டார்சும் இணைந்துள்ளது.

ஆனால், இந்நிறுவனம் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளையே தூக்கி சாப்பிடும் வகையில் சூரிய ஒளியால் இயங்கக்கூடிய எஸ்யூவி ரக காரை தயார் செய்திருக்கின்றது. இக்கார் இயங்குவதற்கு மின்சாரமே முக்கிய தேவையாகும். இதனை நேரடியாக சூரிய ஒளியில் இருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் காரின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

இந்த பேனலின் வாயிலாக சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றி அதையே தனக்கு தேவையான மின்சக்தியாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திறனைப் பெறும் உலகின் முதல் எஸ்யூவி ரக கார் இதுவென்பதால் பலரின் கவனத்தை இக்கார் ஈர்த்திருக்கின்றது. இக்காருக்கு 'ஹம்பிள் ஒன்' எனும் பெயரை நிறுவனம் வைத்திருக்கின்றது.

80 சதுர அடி கொண்ட சோலார் பேனல்கள் இக்காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது ஃபோட்டோவோல்டிக் சோலார் ரூஃப் பேனல்களாகும். இதனைக் கொண்டு சார்ஜ் செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு 96 கிமீ தூரம் வரை பயணம் மேற்கொள்ளக் கூடிய மின்சார சக்தியைப் பெற முடியும்.

மின்சார வாகன உலகில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய வசதிக் கொண்ட கார் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமித்து வைப்பதற்காக என்ன மாதிரியான திறன் கொண்ட பேட்டரிகள் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

இதுபோன்று கார்குறித்த இன்னும் பல சுவாரஷ்ய தகவல்கள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. விரைவில் அவை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சோலார் பேனல் வசதிக் கொண்ட இக்காரை ஹம்பிள் நிறுவனம் 2024ம் ஆண்டிலேயே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அந்த ஆண்டே டெலிவரியும் கொடுக்கப்படும்.

ஆகையால், இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் இக்காரில் மக்கள் பயணிக்கத் தொடங்கிவிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இக்கார் மிக அதிகபட்ச விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 1,09,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஹம்பிள் ஒன் சோலார் பேனல் வசதிக் கொண்ட மின்சார எஸ்யூவி கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் 80.2 லட்சம் இதன் விலையாகும். இது தோராயமான மதிப்பு மட்டுமே ஆகும்.

இந்த உச்சபட்ச விலையிலேயே ஹம்பிள் ஒன் பூஜ்ஜியம் உமிழ்வு திறன் கொண்ட மின்சார கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஏற்கனவே இக்காருக்கான புக்கிங் அமெரிக்காவில் தொடங்கிவிட்டன. இதில் பிரம்மிக்க வைக்கும் வசதிகள் பல இருக்கின்ற காரணத்தினால் முன்பதிவுகள் மிக அமோகமாக நடைபெற்று வருகின்றன.

நான்கு இருக்கைகள் மிகவும் கவர்ச்சியான ஸ்டைல், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக செயல் திறன் என பட்டைய கிளப்பும் வசதிகளில் இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஒட்டுமொத்த எடையே 1,800 கிலோ மட்டும்தானாம்.

இதுபோன்ற பல ஆச்சரியமளிக்கும் வசதியுடனேயே இக்கார் அமெரிக்கர்களின் கைகளில் விளையாட முதலில் களமிறங்க இருக்கின்றது. இக்காரின் இந்திய வருகை கேள்விக் குறியே. இதுகுறித்த எந்தவொரு அறிகுறியும் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








