2011ல் எக்ஸ்யூவி500... 2021ல் எக்ஸ்யூவி700... மாஸ் காட்டத் தயாராகும் மஹிந்திரா!
மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த 2011ல் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி500 மாடலை களமிறக்கி இந்திய கார் சந்தையில் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. டிசைன், எஞ்சின், வசதிகள், விலை என அனைத்திலும் ரகளையாக இருந்ததால், வாடிக்கையாளர்கள் முண்டியடித்து புக்கிங் செய்தனர். எதிர்பாராத அளவு முன்பதிவு குவிந்ததால், குலுக்கல் முறையில் எக்ஸ்யூவி500 எஸ்யூவி வாடிக்கையாளர்களை தேர்வு செய்து டெலிவிரி கொடுத்தது வரலாறு!

எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது உலகளாவிய சந்தைக்கு ஏற்ற அம்சங்களுடன் கொண்டு வரப்பட்டது. அதேபாண்யில், சரியாக ஒரு தசாப்தம் கழித்து, எக்ஸ்யூவி700 என்ற புத்தம் புதிய எஸ்யூவி மாடலை மஹிந்திரா களமிறக்க உள்ளது.

சென்னை அருகே செங்கல்பட்டில் உள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்ட இந்த எஸ்யூவி நவீன யுகத்திற்கு ஏற்ப தொழில்நுட்பத்தில் வேற லெவலில் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடலானது எக்ஸ்யூவி500 மாற்றாக எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மாடலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எக்ஸ்யூவி500 எஸ்யூவியைவிட பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும் என்று கருதப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்வதற்கு ஏற்ப சர்வதேச கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறனுடன் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய குளோபல் பிளாட்ஃபார்மில் இந்த புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், எக்ஸ்யூவி500 எஸ்யூவியைவிட பரிமாணத்திலும் பெரிய மாடலாக இருக்கும் என தெரிகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி மாடல்களுக்கு இடையிலான ரகத்திலும், விலையிலும் வரும் என்று கருதப்படுகிறது. இந்த எஸ்யூவி கட்டமைப்புத் தரத்திலும், பாதுகாப்பிலும் மிகச் சிறந்த மாடலாக இருக்கும். அதாவது, மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாற்றாக இல்லாமல் புதிய மாடலாக நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. ஆனால், இதுவரை மஹிந்திரா நிறுவனம் இதனை உறுதிப்படுத்தவில்லை.

இந்த எஸ்யூவியில் ADAS என்ற அதிநவீன தொழில்நுட்ப அம்சம் இந்த புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் வழங்கப்பட உள்ளது. இதன்மூலமாக, முன்னே செல்லும் வாகனங்கள் மற்றும் அருகே வரும் வாகனங்களை கண்டுணர்ந்து, வேகத்தை தானியங்கி முறையில் கூட்டிக் குறைத்து இயங்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி பிரேக் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்த தொழில்நுட்பம் வழங்கும். அதாவது, விபத்தை தவிர்ப்பதில் அதிக பங்கு வகிக்கும்.

மேலும், இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும் என தெரிகிறது. மேலும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும், ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்ப வசதியும் கூட இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது.

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், மஹிந்திரா கார்களின் பாரம்பரியத்தை பரைசாற்றும் அம்சங்களுடன் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள் ஆகியவற்றுடன் வசீகரிக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் இருப்பது போன்று, டேஷ்போர்டில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருக்கான திரைகள் ஒரே அமைப்பாக இருக்கும்.
ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதி, சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் என அனைத்து வசதிகளும் இடம்பெறும். வயர்லெஸ் சார்ஜர் வசதியும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவியை நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. அதாவது, பண்டிகை காலத்தில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படஉள்ளது. இந்த புதிய மாடலும் நிச்சயம் பெரிய அளவிலான வரவேற்பை பெறும் என்று தெரிகிறது. டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








