விலை குறைவான எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருகிறது... டிரைவ்ஸ்பார்க் நேர்காணலில் எம்ஜி இந்தியா சிசிஓ தகவல்...
2021 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சுமார் 1 வருட காலம் மட்டுமே விற்பனையில் உள்ள நிலையில், அதற்குள்ளாக இந்த காரை பல்வேறு வகைகளில் எம்ஜி மோட்டார் மேம்படுத்தியுள்ளது.
புதிய பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதால், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டிரைவிங் ரேஞ்ச் தற்போது 419 கிலோ மீட்டர்களாக உயர்ந்துள்ளது. அத்துடன் 20.99 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற புதிய ஆரம்ப விலையையும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. 2021 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி கௌரவ் குப்தா, டிரைவ்ஸ்பார்க் உடன் கலந்துரையாடினார். அப்போது இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்ட்டில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அவரது நேர்காணலை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

கேள்வி: 2021 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது அறிமுக சலுகை விலையா? ஆம் என்றால், விலை எப்போது, எவ்வளவு உயரும்?
பதில்: 2021 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது அறிமுக சலுகை விலை கிடையாது. இதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். கடந்த ஆண்டு முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது நாங்கள் இதனை பின்பற்றினோம். ஆனால் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பது புத்தம் புதிய மாடல் இல்லை என்பதால், தற்போது அத்தகைய சலுகை எதுவும் கிடையாது. எனினும் 2021 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளோம்.

கேள்வி: இந்தியாவில் புதிய இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டெலிவரி எப்போது தொடங்கும்? தற்போது இந்தியா முழுவதும் 31 நகரங்களில் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விரிவாக்கம் எப்போது நடக்கும்?
பதில்: 2021 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டெலிவரி பணிகள் இந்தியா முழுவதும் தற்போதே தொடங்குகிறது. அடுத்தகட்ட விரிவாக்கம் என பார்த்தால், வரும் காலங்களில் இன்னும் பல்வேறு புதிய நகரங்களில் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர எம்ஜி விரும்புகிறது. ஆனால் தற்போதைய கவனம் எல்லாம், இந்த 31 நகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதிலும், டீலர்ஷிப்களில் நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களை பணியமர்த்துவது மற்றும் தேவையான கருவிகளை கிடைக்க செய்வது ஆகியவற்றிலும்தான் இருக்கும்.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்தைய சேவையை சிறப்பாக வழங்க வேண்டும். தற்போது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனை செய்யப்படும் 31 நகரங்களில் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இதற்கேற்ப திட்டமிட்டு இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் விற்பனையை விரிவுபடுத்துவோம்.

கேள்வி: மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச் தவிர, 2021 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், வாடிக்கையாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா? மேம்படுத்தப்பட்ட மாடலில் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதியா?
பதில்: பல்வேறு வகையான சாலை சூழல்களில், பிரச்னையின்றி பயணம் செய்ய ஏதுவாக க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய டயர்களும் பயண தரத்தை இன்னும் உயர்த்தும். க்ரவுண்ட் க்ளியரன்ஸை உயர்த்துவதற்காக எங்கள் பேட்டரி தொகுப்பு உற்பத்தியாளருடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்.

கேள்வி: கடந்த ஆண்டு இந்தியாவில், 1,200க்கும் மேற்பட்ட இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை எம்ஜி விற்பனை செய்துள்ளது. தேவை அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டிற்கு ஏதேனும் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
பதில்: விற்பனை அடிப்படையில் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நடப்பாண்டிற்கான இலக்கை எங்களால் வெளியிட முடியாது. எனினும் விற்பனை செய்யப்படும் நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், விற்பனை எண்ணிக்கை உயரும் என நாங்கள் நம்புகிறோம். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவை அதிகரித்து கொண்டே வருவது மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவது ஆகிய காரணங்களால் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் விற்பனை அதிகமாக இருக்கலாம்.

கேள்வி: இந்தியாவில் பேட்டரி தொகுப்பை உற்பத்தி செய்யும் திட்டங்கள் உள்ளனவா?
பதில்: இந்தியாவில் பேட்டரி தொகுப்பை அசெம்பிள் செய்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எங்களது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைப்பதற்கு இது இன்னும் உதவி செய்யும். இது எப்போது நடக்கும்? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் இந்த திட்டத்தை வெளிப்படுத்துகிறோம் என்பது, எங்களது உறுதியான முடிவை வெளிக்காட்டுகிறது.

கேள்வி: எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்திய சந்தைக்கென விலை குறைவான எலெக்ட்ரிக் காரை எம்ஜி மோட்டார் விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா? ஆம் என்றால், அது அடுத்த மாடலாக இருக்குமா?
பதில்: ஆம், இந்திய சந்தையில் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய மாடலின் விலை 20 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்.

கேள்வி: அதிக ரேஞ்ச் கொண்ட இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருமா? ஆம், என்றால் தோராயமாக எவ்வளவு கிலோ மீட்டர் ரேஞ்ச் என்பதை கூற முடியுமா?
பதில்: எலெக்ட்ரிக் வாகனங்களுடன் தொடர்புடைய தயாரிப்புகள் அல்லது உபகரணங்கள் என எதுவாயினும் அதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் எம்ஜி மோட்டார் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அதிக ரேஞ்ச் வழங்கும் எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பம் என பார்த்தால், தற்போது புதிய பேட்டரி தொகுப்பு ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால், 500 கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணம் செய்ய முடியும்.
இந்த புதிய பேட்டரி தொகுப்பு இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கானது மட்டும் கிடையாது. எதிர்காலத்தில் எம்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் கார்களிலும் இந்த புதிய பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்படும்.

கேள்வி: எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் எம்ஜி மோட்டார் கூட்டணி அமைத்துள்ளது. இந்த விஷயத்தில் உங்களின் அடுத்தகட்ட திட்டங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா?
பதில்: சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக டாடா பவர், ஃபோர்ட்ரம் மற்றும் டெல்டா போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இந்தியாவில் 16 டிசி ஃபாஸ்ட் சார்ஜர்களை பொருத்தியுள்ள ஒரே நிறுவனம் நாங்கள் மட்டும்தான். இந்த எண்ணிக்கை நடப்பாண்டு இறுதிக்குள் 55 ஆக உயரும்.
இதுதவிர எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சார்ஜிங் தொடர்பாக உள்ள பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வை நாங்கள் வழங்கி வருகிறோம். தங்களது எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ள அவர்களுக்கு 5 வெவ்வேறு வழிகள் உள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களை சொந்தமாக வைத்திருப்பதை இது அவர்களுக்கு எளிமையாக்கும். இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

கேள்வி: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்ட்டில் எம்ஜி நுழைந்து ஒரு வருடம் ஆகியுள்ளது. இதைப்ற்றி சுருக்கமாக சொல்லுங்களேன்?
பதில்: இந்தியாவில் எங்களது முதல் எலெக்ட்ரிக் தயாரிப்பிற்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 5 நகரங்களில் மட்டுமே எலெக்ட்ரிக் கார் விற்பனை என்ற நிலையில் இருந்து தற்போது 31 நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளோம். எலெக்ட்ரிக் வாகன செக்மெண்ட்டில் இது எங்களுடைய முன்னேற்றத்தை காட்டுகிறது. அதனை நாங்கள் தொடர்வோம்.


Click it and Unblock the Notifications








