இந்தியாவில் விற்பனை செய்த கார்களில் கோளாறு! மீண்டும் கார்களை திரும்பி எடுத்து வர அழைக்கும் பிரபல நிறுவனம்!
பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்தியாவில் விற்பனைச் செய்த குறிப்பிட்ட கார் மாடல் திரும்பி எடுத்து வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது. காரின் குறிப்பிட்ட ஓர் உதிரிபாகத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், அதனை சீர் செய்யும் பொருட்டு இந்த அழைப்பை பிரபல நிறுவனம் விடுத்திருக்கின்றது. இதுகுறித்த மேலும் பல முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஜீப் நிறுவனமே இந்த அழைப்பை விடுத்த நிறுவனம் ஆகும். நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வரும் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஜீப் ரேங்லர் (Jeep Wrangler SUV) எஸ்யூவி ரக வாகனமும் ஒன்று. இக்காருக்கு இந்தியா பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. எனவேதான் பிற சொகுசு கார்களுக்கு இணையாக நல்ல டிமாண்டை இது பெற்று வருகின்றது.

இந்த நிலையிலேயே, சமீபத்தில் விற்பனைச் செய்யப்பட்ட 39 யூனிட் ரேங்லர் எஸ்யூவி காரை திரும்பி எடுத்து வருமாறு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. ஜீப் நிறுவனம் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட கார் மாடலாக வ்ராங்களரை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

ஆகையால், இதன் விலை பல மடங்கு அதிகமாக உள்ளது. இருப்பினும், தொழிலதிபர்கள் மற்றும் இந்திய திரை நட்சத்திரங்கள் மத்தியில் இக்காருக்கு அமோக டிமாண்ட். இந்த நிலையிலேயே, கடந்த ஆண்டு (2020) ஜனவரி 24ம் தேதி மற்றும் 2020 மார்ச் 17ம் தேதி ஆகிய நாட்களில் உருவாக்கப்பட்ட ஜீப் ரேங்லர் எஸ்யூவி காரில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எரிபொருளை கடத்திச் செல்லும் இணைப்பில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. இது தீ விபத்து உள்ளிட்டவற்றை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே முன்னெச்சரிக்கையாக பெரும் ஆபத்து அரங்கேறுவதற்கு முன்னதாக வ்ராங்களரை திரும்பி அழைக்கும் பணியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

இந்த அழைப்பின்கீழ் பாதிக்கப்பட்ட (கோளாறு உள்ள) பாகம் நீக்கப்பட்டு, புதிய பாகம் பொருத்தி தரப்பட இருக்கின்றது. உற்பத்தியில் ஏற்பட்ட கோளாறு என்பதால் இதனை கட்டணமில்லா சேவையாக நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை தரும் பொருட்டு நிறுவனம் தாமாக முன் வந்து கோளாறை சரி செய்யும் பணயில் களமிறங்கி இருக்கின்றது.

இதுகுறித்து ஜீப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் நிபுன் மஹாஜன் கூறியதாவது, "வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் தரம் ஆகியவை எங்களின் முன்னுரிமைகள். இதனடிப்படையிலேயே இப்பிரச்சினை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டிருக்கின்றது" என்றார்.

மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே 39 ஜீப் ரேங்லர் வாடிக்கையாளர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மின்னஞ்சல் மட்டுமின்றி அழைப்புகளின் வாயிலாகவும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் தனது அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது.

ஜீப் நிறுவனம் ரேங்லர் எஸ்யூவி காரின் உற்பத்தியை நடப்பாண்டு பிப்ரவரியில் இருந்து இந்தியாவில் மேற்கொண்டு வருகின்றது. ரஞ்சன்கவுனில் உள்ள ஃபியட் க்ரைஸ்லர் குழுமத்தின் ஆலையில் வைத்து இந்த கார் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கு வைத்து தயாரிக்கப்பட்ட ரேங்லர் காரில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

உள்ளூரில் வைத்து கட்டமைக்கப்பட்ட ரேங்லர் எஸ்யூவி கடந்த மார்ச் 17ம் தேதியில் இருந்து நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. ரூ. 53.90 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஜீப் இந்தியாவில் கார் கட்டமைப்பைத் தொடங்கி விற்பனைக்கு வந்த கார் மாடல் இதுவே ஆகும்.

ஜீப் ரேங்லர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 262 எச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினைக் கட்டுப்படுத்துவதற்காக 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், அதிக எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் சில தனித்துவமான தொழில்நுட்ப வசதிகளை ஜீப் பயன்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








