கர்நாடகாவிற்கு அடித்த யோகம்... எடியூரப்பா அதிகாரப்பூர்வ தகவல்... என்ன தெரியுமா?
கர்நாடகா மாநிலத்தில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி ஆலை அமைய இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அம்மாநில முதலமைச்சர் உறுதி செய்திருக்கின்றார்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம், டெஸ்லா. இந்நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியை மட்டுமே முக்கிய உற்பத்தியாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலக நாடுகள் பலவற்றில் அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது.

இந்த வரவேற்பை இந்தியர்களிடத்திலும் இருந்தும் பெற வேண்டும் என்பதில் டெஸ்லா அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இதனைத் தொடர்ந்து, தனது வாகனங்களின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கும் முயற்சியில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

டெஸ்லாவின் இந்த முயற்சியை அடுத்து கர்நாடகா, தமிழகம், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிடையே போட்டி ஏற்படத் தொடங்கியது. மின்சார கார் உற்பத்தி ஆலையை தங்களுடைய மாநிலத்தில் தொடங்குமாறு ஒவ்வொரு மாநிலமும் மாறி மாறி அழைப்பு விடுத்தன.

மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட இப்போட்டி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. எந்த மாநிலத்தில் இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொடங்கப்படும் என்ற கேள்வியே பெருத்த சந்தேகமாக இருந்தது. இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி ஆலை கர்நாடகாவில் அமைய இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த தகவலை அம்மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா உறுதிப்படுத்தியுள்ளார். அண்மையில், பிடிஐ ஆங்கில செய்தி தளத்திற்கு இவர் அளித்த பேட்டியின் வாயிலாகவே இந்த தகவல் உறுதியாகியுள்ளது. ஆனால், கர்நாடகா மாநிலத்தின் எந்த பகுதியில் உற்பத்தி ஆலை அமைய இருக்கின்றது, என்ற அதிகாரப்பூர்வ தகவலை அவர் வெளியிடவில்லை.

டெஸ்லா நிறுவனம் அதன் மின் வாகன உற்பத்தி ஆலை இந்தியாவிலேயே தொடங்குவதன் மூலம் அந்நிறுவனத்தின் கார்களைச் சற்று குறைந்த விலையில் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இறக்குமதி வாயிலாக இதனைப் பெறக் கூடிய சூழல் உருவாகினால், அது மிக அதிக விலைக் கொண்டதாக இருக்கும். இந்த நிலையைப் போக்க வேண்டும் என்பதற்காகவே டெஸ்லா நிறுவனம் அதன் உற்பத்தி ஆலையை இந்தியாவிலேயே நிறுவ நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

ஏற்கனவே டெஸ்லா நிறுவனம் "டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனெர்ஜி பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் தனது முதல் அலுவலகத்தை இந்நிறுவனம் இந்தியாவில் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று இயக்குநர்களையும் இந்தியாவில் இந்நிறுவனம் நியமித்துள்ளது. இந்த நிலையிலேயே இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலையும் கர்நாடாகவில் அமைய இருப்பது உறுதியாகியுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 எனும் மின்சார காரே இந்தியாவில் முதலில் எதிர்பார்க்கப்படுகின்றது. உலகளவில் அமோகமான வரவேற்பைப் பெறும் மின்சார கார்களில் இதுவே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. காரணம், இந்த கார் விலைக் குறைந்தது மட்டுல்ல, அதிக சொகுசு வசதி மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டதும்கூட.

டெஸ்லா மாடல் 3 மின்சார காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த கார் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி மற்றும் ஆடி இ-ட்ரான் எஸ்யூவி மற்றும் வால்வோ எக்ஸ்சி-40 ஆகிய மின்சார கார்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








