புதிய Kia Seltos X Line இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! விலை & சிறப்பம்சங்கள்- முழு விபரம்!
கியா செல்டோஸ் (Kia Seltos) டாப் எக்ஸ் லைன் (X Line) ட்ரிம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செல்டோஸின் இந்த புதிய டாப் ட்ரிம் நிலை குறித்த விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த 2021ஆம் ஆண்டில் இருந்து புதிய பிராண்ட் தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டுவரும் கியா நிறுவனத்தில் இருந்து இன்று (செப்டம்பர் 1) ரூ.17.79 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் செல்டோஸ் எக்ஸ் லைன் டாப் ட்ரிம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வழக்கமான செல்டோஸ் காரில் இருந்து வித்தியாசப்படுத்துவதற்காக வெளி மற்றும் உட்பக்கங்களில் ஏராளான கவனிக்கத்தக்க அப்டேட்கள் புதிய எக்ஸ் லைன் ட்ரிம்-இல் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்பக்கத்தில் பிரத்யேகமான ‘மேட் க்ராபைட்' பெயிண்ட் தேர்வை செல்டோஸ் எக்ஸ் லைன் பெற்றுவந்துள்ளது.

அதேநேரம் இந்த பெயிண்ட்டிற்கு ஏற்ப 18-இன்ச் க்ரிஸ்டல் அலாய் சக்கரங்கள் மேட் க்ராபைட் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு விற்பனையில் ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டர், டாடா ஹெரியர், ஸ்கோடா குஷாக் என மற்ற முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பு வாகனங்கள் போட்டியாக உள்ளன.

ஆனால் இவை எதிலும் 18 இன்ச்சில், பெரிய அளவிலான அலாய் சக்கரங்கள் வழங்கப்படுவது இல்லை. இந்த பெருமையை எக்ஸ் லைன் ட்ரிம் மூலமாக செல்டோஸ் பெற்றுள்ளது. இந்த புதிய ட்ரிம்-இல், ஸ்பெஷல் வேரியண்ட் என்பதை வெளிக்காட்டும் விதமாக ‘X Line' லோகோக்கள் காரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளன.

உட்புறத்தில் இந்த ஸ்பெஷல் வேரியண்ட் இண்டிகோ பெரா லெதரால் அலங்கரிக்கப்பட்ட கேபினை கொண்டுள்ளது. இருக்கைகள் தேன்க்கூடு டிசைனில் தையலிடப்பட்டுள்ளன. இதுவும் செல்டோஸ் எக்ஸ் லைனின் கேபின் வழக்கத்தை காட்டிலும் பிரீமியம் தோற்றத்தில் காட்சியளிப்பதற்கு காரணமாகும்.

புதிய செல்டோஸ் எக்ஸ் லைனை ஆட்டோமேட்டிக் தேர்வில் மட்டுமே கியா நிறுவனம் வழங்கியுள்ளது. மேனுவல் தேர்வில் கிடைக்காது. ஆனால் இரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும். அதாவது எக்ஸ் லைன் காரை 1.4 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் அல்லது 1.5 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி டீசல் என்ஜினில் வாங்கலாம்.

இதில் பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி என்ற ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும், டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் இணைக்கப்படும். இந்தியாவில் தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் முதன்முதலாக அறிமுகப்படுத்திய மாடல் தான் செல்டோஸ் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

2019ஆம் ஆண்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட செல்டோஸ் எஸ்யூவி நம் நாட்டு சந்தையில் கியா நிறுவனத்திற்கு மிக சிறந்த அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது என்றால் அதில் மிகையில்லை. ஸ்டைலிஷான தோற்றமும், தொழிற்நுட்பங்கள் நிறைந்த கேபினும் தான் இந்த தென்கொரிய எஸ்யூவி காரின் ஹைலைட்களாகும்.

அதேநேரம் ட்ரைவிங் திறனிலும் செல்டோஸ் சிறந்ததாக உள்ளது. அறிமுகமான சமயத்தில் கியா செல்டோஸ் மற்ற போட்டி மாடல்களுடன் ஒப்பிடும்போது புதுமையான காராக விளங்கியது, ஆனால் தற்போது சற்று பழையது ஆகிவிட்டது. இதனால் செல்டோஸில் புதிய எக்ஸ் லைன் ட்ரிம் கொண்டுவருவதற்கு இது சரியான தருணமே ஆகும்.

கியா இந்தியா நிறுவனத்தின் முதன்மை இயக்குனரும், விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைமை நிர்வாகியுமான டே-ஜின் பார்க் கூறுகையில், டாப்-ஆஃப்-லைன் எக்ஸ் லைன் ட்ரிம்-ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம், பிரிவில் செல்டோஸின் தலைமை மற்றும் பிரீமியம் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறோம் என கூறினார்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 2 வருடங்களாக விற்பனையில் இருந்துவரும் கியா செல்டோஸ் இதுவரையில் மட்டுமே 2 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. செல்டோஸ் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.9.96 லட்சத்தில் இருந்து ரூ.17.86 லட்சம் வரையில் உள்ளன.


Click it and Unblock the Notifications








