அகோரமாக்கிய அதிவேகம்.. பாலத்தில் மோதி இரண்டாக உடைந்த கியா செல்டோஸ் கார்... 3 பேர் பலியான பரிதாபம்!
மத்திய பிரதேச மாநிலத்தில் அதிவேகமாக சென்ற கியா செல்டோஸ் எஸ்யூவி கார் பயங்கர விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் சிந்த்வாரா என்ற இடத்தில் நாக்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்த படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த படங்கள் பார்ப்போரை அதிர்ச்சியில் உறைய வைப்பதாக இருக்கிறது.

இந்த விபத்தில் சிக்கிய கியா செல்டோஸ் கார் விபத்தில் சிக்கிய வேகத்தில் இரண்டு பாதியாக உடைந்துவிட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிவேகமாக வந்தபோது அந்த கியா செல்டோஸ் கார் கட்டுப்பாட்டை இழந்துஅங்கிருந்த வாய்க்கால் பாலம் ஒன்றின் தடுப்புச் சுவிரில் மோதி விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. அதிவேகம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தெரிகிறது.

விபத்தில் சிக்கிய காரின் உள்ளே இருந்தவர்களை மீட்பதற்காக இந்த கார் கருவி மூலமாக இரண்டாக உடைக்கப்பட்டு இருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த படங்களை பகிர்ந்து கொண்ட அப்பகுதியை சேர்ந்தவர், பாலத்தில் மோதிய வேகத்தில் கார் இவ்வாறு இரண்டாக உடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வளவு பாதுகாப்பு வசதிகள் மற்றும் சிறந்த கட்டமைப்பு கொண்ட காராக இருந்தாலும், அதிவேகத்தில் செல்லும்போது அது உதவாது என்று சில மாதங்களுக்கு முன் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படியே, இந்த கார் விபத்தும் கருத முடிகிறது. எவ்வளவு பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், அதிவேகத்தில் செல்லும்போது இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியாது என்பதை இந்த விபத்து உணர்த்துவதாக உள்ளது. அதிவேகத்தில் யாராலும் உங்களை காப்பாற்ற இயலாது என்பதை நினைவில் கொண்டு அதிவேகமாக ஓட்டுவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

இதுபோன்ற செய்திகள் பெரும் துயரத்தை தருகின்றன. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க இந்த விபத்தை ஒரு பாடமாக அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கருதியே இந்த செய்தியை வெளியிடுகிறோம். அதிவேகம் உங்களுக்கு மட்டுமல்லாது சாலையில் வரும் பிற வாகன ஓட்டிகள், பிராயணிகள், பாதசாரிகளின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும், அவர்களது குடும்பத்தாரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தும் என்பதை மனதில் வைத்து வேகத்தை விட்டு விவேகமாக செயலாற்ற வேண்டும் என்பதே எமது விருப்பம்.
Images Courtesy: Facebook


Click it and Unblock the Notifications








