கியா சோல் காருக்கு இந்தியாவில் டிரேட்மார்க் பதிவு!
கியா சோல் காருக்கு இந்தியாவில் டிரேட்மார்க் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த 2020ம் ஆண்டு நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் கியா சோல் கார் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. க்ராஸ்ஓவர் எஸ்யூவி ரகத்திலான இந்த காருக்கு பார்வையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. இதையடுத்து, இந்த காரை இந்தியா கொண்டு வருவது குறித்து கியா நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

இந்த நிலையில், சோல் என்ற பெயரை இந்தியாவில் கியா நிறுவனம் டிரேட்மார்க் செய்துள்ளது. இதனால், இந்த கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

2020ம் ஆண்டின் உலகின் சிறந்த நகர்ப்புற பயன்பாட்டுக்கான கார் என்ற விருதை கியா சோல் கார் பெற்றது. இந்த நிலையில், இந்த காரின் பெயர் இந்தியாவில் டிரேட்மார்க் செய்யப்பட்டு இருப்பதால், வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் கியா சோல் காரில் மூன்று பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 121 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

இதன் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 198 பிஎச்பி பவரை வழங்கும். இதனுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 146 பிஎச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

கியா சோல் கார் மின்சார மாடலிலும் கிடைக்கிறது. சோல் இவி என்ற பெயரில் விற்பனையில் இருக்கும் இந்த காரில் 64kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி அதிகபட்சமாக 198 பிஎச்பி பவரை வழங்கும். அதிகபட்சமாக 452 கிலோமீட்டர் தூரம் செல்லும் வாய்ப்பை வழங்கும்.

இந்தியாவில் பெட்ரோல் மாடலில் வருமா அல்லது மின்சார மாடலில் வருமா என்பது குறித்த தகவல் இல்லை. எனினும், இந்த கார் வருகை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








