ஏப்ரல் 1 முதல் அமல்... எந்தெந்த நிறுவனங்களின் வாகனங்கள் விலை அதிரடியாக உயரப்போகிறது தெரியுமா?
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் எந்தெந்த நிறுவனங்கள் வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் டூவீலர் மற்றும் கார் உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் வாகனங்களின் விலைகளை உயர்த்தியிருந்தன. இதை தொடர்ந்து நடப்பாண்டில் 2வது முறையாக ஒரு சில நிறுவனங்கள் தங்களுடைய வாகனங்களின் விலையை அதிரடியாக உயர்த்தவுள்ளன. இந்த விலை உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது.

உற்பத்தி செலவு அதிகரித்து வருவதன் காரணமாகவே நடப்பாண்டில் வாகனங்களின் விலை மீண்டும் ஒரு முறை உயர்த்தப்படவுள்ளது. தற்போதைய நிலையில் ஏராளமான நிறுவனங்கள் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் எவை? எவை? என்பதை இந்த செய்தியில் சுருக்கமாக பார்க்கலாம்.

மாருதி சுஸுகி: இம்முறை விலை உயர்வு குறித்த அறிவிப்பை முதலாவதாக வெளியிட்ட நிறுவனம் மாருதி சுஸுகிதான். இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி தனது அனைத்து கார்களின் விலைகளையும் உயர்த்தவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவன கார்களின் எக்ஸ் ஷோரூம் விலை 1-6 சதவீதம் வரை உயரவுள்ளது.

அதாவது மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை பொறுத்து, 5 ஆயிரம் ரூபாய் முதல் 34 ஆயிரம் ரூபாய் வரை விலை அதிரடியாக உயரவுள்ளது. எனவே இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு காரணமாக மாருதி சுஸுகி கார்களின் விற்பனை பாதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

நிஸான்: மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பிறகு, இந்தியாவில் தனது கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக அறிவித்த அடுத்த நிறுவனம் நிஸான். ஆனால் கார்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பதை நிஸான் அறிவிக்கவில்லை. ஏப்ரல் 1 முதல் அனைத்து கார்களின் விலையும் உயரவுள்ளதாக மட்டும் கூறியுள்ளது. மாடல்களை பொறுத்து இந்த விலை உயர்வு வேறுபடும்.

டட்சன்: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து டட்சன் கார்களின் விலையும் உயரவுள்ளது. நிஸான் நிறுவனத்தை போலவே டட்சனும் கார்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பதை கூறவில்லை. ஆனால் டட்சன் ரெடிகோ, டட்சன் கோ மற்றும் டட்சன் கோ ப்ளஸ் ஆகிய கார்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது.

ரெனால்ட்: ரெனால்ட் நிறுவனமும் விலை உயர்வை மட்டும்தான் அறிவித்துள்ளது. கார்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக ரெனால்ட் கார்களின் விலை உயரவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடப்பாண்டு ஜனவரி மாதம், ரெனால்ட் நிறுவனம் கார்களின் விலையை 28 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியிருந்தது.

ஃபோர்டு இந்தியா: மேற்கண்ட நிறுவனங்களின் வரிசையில் ஃபோர்டு நிறுவனமும் இணைந்துள்ளது. ஃபோர்டு இந்தியா நிறுவனம் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து தனது கார்களின் விலை 3 சதவீதம் வரை உயர்த்தப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. கார்களின் மாடல்களை பொறுத்து இந்த விலை உயர்வு வேறுபடும்.

ஹீரோ மோட்டோகார்ப், கவாஸாகி: இந்தியாவில் தனது இரு சக்கர வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளது குறித்த முடிவை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் தெரிவித்துள்ளது. இதன்படி வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ஹீரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை 2,500 ரூபாய் வரை உயரவுள்ளது. இதேபோல் ஒரு சில கவாஸாகி பைக்குகளின் விலைகளும் உயர்த்தப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications








