சூப்பர் அறிவிப்பு... மஹிந்திரா டீலரிலேயே பழைய காரை அழிக்கக் கொடுக்கலாம்!
பழைய காரை அழிக்கக் கொடுத்து புதிய கார் வாங்குவதற்கான நடைமுறையை மிக எளிதாக வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான வாய்ப்பை மஹிந்திரா அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த மாதம் 18ந் தேதி இந்தியாவில் உள்ள பழைய வாகனங்களை அழிப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. வரும் அக்டோபர் 1 முதல் பழைய வாகன அழிப்புத் திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட உள்ளது. அதிக மாசு உமிழ்வு மற்றும் சாலையில் இயக்குவதற்கு தகுதியற்ற வாகனங்களை ஒழித்துக் கட்டும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், இந்த திட்டத்திற்கான வரைமுறைகளை வகுத்து ஒப்புதல் பெறும் பணிகளில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின கீழ் பழைய காரை அழிக்கக் கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு சான்று வழங்கப்படும்.

இந்த சான்றை வைத்து புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் சில தள்ளுபடி மற்றும் சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட உள்ளன. இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பழைய காரை அழிக்கக் கொடுத்து புதிய கார் வாங்குவதற்கான நடைமுறைகளை மிக எளிதாக பெறுவதற்கான வாய்ப்பை மஹிந்திரா அறிவித்துள்ளது.

அதாவது, பழைய காருக்கு விலை மதிப்பீடு செய்வது, வீட்டில் இருந்து கார் அழிப்பு மையத்திற்கு எடுத்துச் செல்வது, அழித்ததற்கான சான்று பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா வழங்க உள்ளது.

15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காரை கொடுத்து புதிய மஹிந்திரா காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தை மஹிந்திரா அறிவித்துள்ளது. கார் அழிப்பு டீலர் அல்லது யார்டுக்கு செல்லாமல் நேரடியாக புதிய மஹிந்திரா கார் டீலரிலிருந்து இந்த நடைமுறைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதன்முலமாக, தேவையற்ற அலைச்சலை தவிர்க்க முடியும்.

கார் அழிக்கக் கொடுத்ததற்கான சான்று மூலமாக மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய சலுகைகளை மஹிந்திரா வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும், கொரோனா பிரச்னையை கருத்தில்கொண்டு, வீட்டிற்கு வந்தே பழைய காரை மதிப்பீடு செய்து தரும் பணியையும் வழங்குவதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்காக மஹிந்திரா கார் அழிப்பு நிறுவனத்துடன் (MMRPL) மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், பழைய காரை அழிப்பதற்கான அனைத்து நடைமுறைகளையும் மஹிந்திரா டீலர் மூலமாக பெற முடியும்.

சென்னை, கிரேட்டர் நொய்டா மற்றும் புனே ஆகிய நகரங்களில் மஹிந்திரா நிறுவனத்தின் பழைய வாகன அழிப்பு மையங்கள் உள்ளன. மேலும், பெங்களூர், மும்பை, ஹைதராபாத், ஆமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் பழைய கார்களை அழிப்பதற்காக சேகரிக்கும் மையங்கள் செயல்பட உள்ளன. அடுத்த 8 முதல் 10 மாதங்களில் மேலும் 25 நகரங்களில் இந்த பழைய கார் அழிப்பு சேகரிப்பு சேவை மையங்கள் திறக்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








