கார்களின் விலையை மீண்டும் உயர்த்த மஹிந்திரா திட்டம்
புத்தாண்டு பிறந்த உடன் முதல் வேலையாக கார்களின் விலையை உயர்த்திய மஹிந்திரா நிறுவனம் மீண்டும் கார்களின் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பிரச்னை காரணமாக, கார் விற்பனை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால், ஆண்டு இறுதியில் கார் விற்பனை மீண்டும் சூடுபிடித்ததால், கார் நிறுவனங்கள் சற்று நிம்மதி அடைந்தன.

அதேநேரத்தில், கார் விற்பனையில் எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, சிறப்புச் சலுகைகளை வழங்கியதுடன், கார் விலை உயர்வையும் 'தம்' கட்டி தவிர்த்து வந்தன. இந்த நிலையில், தற்போது கார் விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கடந்த மாதம் தைரியமாக கார் விலை உயர்வை பெரும்பாலான நிறுவனங்கள் அறிவித்தன.

இதில், மஹிந்திரா நிறுவனமும்தனது பங்குக்கு கார் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் விலையை 1.9 சதவீதம் வரை உயர்த்தியது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

மூலப்பொருட்கள் விலை உயர்வால், உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியவில்லை என்று மஹிந்திரா தெரிவித்தது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் துவங்க இருக்கும் அடுத்த நிதி ஆண்டு காலத்தின் முதல் காலாண்டில் மீண்டும் வாகனங்களின் விலையை உயர்த்தும் வாய்ப்பு இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் சூசகமாக தெரிவித்துள்ளது.

விலை வாசி மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, வாகனங்கள் விலை அடுத்த ஓரிரு மாதங்களில் உயர்த்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பிரச்னை காரணமாக வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை மக்கள் சந்தித்ததால், கார் வாங்கும் ஆர்வம் குறைவாக இருந்தது.

ஆனால், தற்போது சூழல் மேம்பட்டு வருவதுடன், கொரோனா பிரச்னையில் இருந்து தப்புவதற்காக பலர் தனிநபர் வாகனங்களை வாங்கி பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில், அடுத்தடுத்த விலை உயர்வு என்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதுடன், ஆர்வத்தை குறைப்பதாகவும் அமைய வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








