இந்தியாவின் தங்க மகனுக்கு சூப்பரான பரிசை வழங்கிய மஹிந்திரா... இந்த காருக்காகதான் நிறைய பேர் தவம் கெடக்கறாங்க!
இந்தியாவின் தங்க மகனுக்கு மஹிந்திரா நிறுவனம் சூப்பரான பரிசை வழங்கி அசத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்யூவி700 காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதிக்குள் 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்தியாவின் சுமித் அன்டிலுக்கு (Sumit Antil), எக்ஸ்யூவி700 காரின் கோல்டு எடிசனை மஹிந்திரா நிறுவனம் தற்போது பரிசாக வழங்கியுள்ளது. இது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பரிசுதான். தற்போது கார் சுமித் அன்டிலிடம் வழங்கப்பட்டுள்ளது.

டோக்கியோவில் சமீபத்தில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் எஃப்64 பிரிவில், இந்தியாவின் சுமித் அன்டில் தங்க பதக்கம் வென்றார். இறுதி போட்டியில் 68.55 மீட்டருக்கு ஈட்டி எறிந்ததன் மூலம் சுமித் அன்டில் தங்க பதக்கத்தை தட்டி சென்றார். இதை குறிப்பிடும் வகையில், டெயில்கேட் மற்றும் ஃபெண்டரில் '68.55' என்ற பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் ஈட்டி எறிதல் முத்திரையும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுமித் அன்டிலின் சாதனை, ஹெட்ரெஸ்டுகள் மற்றும் முன் பக்க டேஷ்போர்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இருக்கைகளில் தங்க நிற தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புத்தம் புதிய காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்பது பிரம்மிக்க வைக்கும் விஷயமாக உள்ளது.

எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான காத்திருப்பு காலம் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக அதிக எண்ணிக்கையில் முன்பதிவுகள் குவிந்துள்ளதால், மஹிந்திரா நிறுவனம் உற்பத்தி பணிகளை முடுக்கி விட்டால் மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்யூவி700 காரை விரைவாக டெலிவரி கொடுக்க முடியும்.

ஏற்கனவே செமி கண்டக்டர் பற்றாக்குறையால், புதிய தலைமுறை தார் எஸ்யூவி காரின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், புத்தம் புதிய எக்ஸ்யூவி700 காருக்கு இந்த அளவிற்கு முன்பதிவுகள் குவிந்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உற்பத்தி பாதிக்கப்படாமல் கார் விரைவாக டெலிவரி கிடைக்க வேண்டும் என்பதுதான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில், 2.2 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் தேர்வும், 2.0 லிட்டர் நான்கு-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு இன்ஜின்களுடனும், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. இவை சக்தி வாய்ந்த இன்ஜின்கள் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் தொழில்நுட்ப வசதிகளில் தலைசிறந்து விளங்குகிறது. மேலும் இதன் டிசைனும் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்துதான், வாடிக்கையாளர்களை எக்ஸ்யூவி700 காரின் பக்கம் இழுத்து வருகின்றன.

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், புதிய தலைமுறை ஸ்கார்பியோ உச்சகட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் நேரடி போட்டியாக இருக்கும். எனவே இந்த எலெக்ட்ரிக் காருக்காகவும் வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








