மஹிந்திரா எஸ்யூவி கார்களின் விலை கணிசமாக உயர்வு!
மஹிந்திரா எஸ்யூவி ரக கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. புதிய தார் எஸ்யூவியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை வைத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கார் விலையை உயர்த்துவது குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் பரிசீலிப்பது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு கொரோனா பிரச்னை காரணமாக, சந்தை சூழல் சரியில்லாத நிலையில் கார் விலை உயர்வை அனைத்து நிறுவனங்களும் தள்ளிப் போட்டு வந்தன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்ததால், புத்தாண்டு முதல் விலையை உயர்த்துவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்தன.

மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களை வைத்து, ஜனவரியில் கார் விலையை பல முன்னணி நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அந்த வகையில், எஸ்யூவி தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனம் கார் விலையை உயர்த்துவதாக அறிவித்தது.

அதன்படி, தனது அனைத்து கார்களின் விலையையும் 1.9 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறது மஹிந்திரா நிறுவனம். இதன்மூலமாக, மஹிந்திரா கார்களின் விலை ரூ.4,500 முதல் ரூ.40,000 வரை கார் மாடல்கள் மற்றும் வேரியண்ட்டுகளுக்கு தக்கவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மஹிந்திரா கார்களின் விலை உயர்வும் நேற்றுமுதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கடந்த டிசம்பர் 1 முதல் ஜனவரி 7 வரை புதிய தார் எஸ்யூவியை புக்கிங் செய்தவர்களுக்கும் புதிய விலை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி வீஜே நக்ரா கூறுகையில்,"மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செலவீனம் மிக கடுமையாக அதிகரித்துள்ளதையடுத்து, கார்களின் விலையை உயர்த்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

விலை உயர்வை தள்ளிப் போடுவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்தோம். ஆனால், தொடர்ந்து மூலப்பொருட்களின் விலை உயர்வு இருப்பதால், ஜனவரி 8, 2021 முதல் கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








