எக்ஸ்யூவி500 எஸ்யூவி விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மஹிந்திரா முடிவு!
புதிய மாடல் வருகையையடுத்து, எக்ஸ்யூவி500 எஸ்யூவியை சந்தையிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்க மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி இருந்து வருகிறது. அட்டகாசமான டிசைன், வசதிகள், சரியான விலை என்பதுடன், 7 சீட்டர் மாடலாக இருந்ததும் அதிக மதிப்பை பெற்று வந்தது. இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி உள்ளிட்ட போட்டியாளர்கள் அண்மையில் களமிறங்கின.

புதிய போட்டியாளர்களின் வருகையை முறியடிக்கும் விதத்தில், எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு மாற்றாக புதிய மாடலை மஹிந்திரா கொண்டு வர இருக்கிறது. எக்ஸ்யூவி700 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புத்தம் புதிய எஸ்யூவி, மிகவும் பிரிமீயம் அம்சங்களுடன் வர இருக்கிறது.

இந்த சூழலில், மிகவும் வெற்றிகரமான மாடலாக இருந்து வரும் எக்ஸ்யூ500 எஸ்யூவியின் எதிர்காலம் குறித்து ரசிகர்களும், வாடிக்கையாளர்களும் சந்தேகம் எழுப்பி வந்தனர். இந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விற்பனை குறித்து மஹிந்திரா புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விற்பனையை சிறிது காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் இதுகுறித்த கேள்விக்கு மஹிந்திரா நிறுவனம் இந்த பதிலை கொடுத்துள்ளது.

எனவே, அடுத்த சில மாதங்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. அதன்பிறகு, மாற்றங்களுடன் கூடிய மாடலாக அல்லது புதிய மாடலாகவோ மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியை கொண்டு வருவதற்கு மஹிந்திரா பரிசீலனை செய்யும் என்று நம்பப்படுகிறது.

அதாவது, எக்ஸ்யூவி500 எஸ்யூவி 5 சீட்டர் மாடலாகவும், எக்ஸ்யூவி700 எஸ்யூவி 6 சீட்டர் அல்லது 7 சீட்டர் ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும், புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புக்கிங் மற்றும் காத்திருப்பு காலத்தை பொறுத்து, புதிய எக்ஸ்யூவி500 எஸ்யூவியை மீண்டும் கொண்டு வரும் திட்டமும் அந்நிறுவனத்திடம் உள்ளதாக தெரிகிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. அதாவது, பண்டிகை காலத்தில் கொண்டு வரப்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிட்டது.

புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் ADAS தொழில்நுட்ப,ம், எல்இடி விளக்குகள், பனோரமிக் சன்ரூஃப், தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஏர்பேக்குகள், இபிடியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் சிஸ்டம் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியானது மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில் 190 எச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 185 எச்பி பவரை வழங்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications








