உச்சகட்ட வரவேற்பு... புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க மஹிந்திரா திட்டம்...
புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை தார் எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அனைத்து விதங்களிலும் பூர்த்தி செய்த காரணத்தால், புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் 17 நாட்களில் மட்டும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்தன. கடந்த அக்டோபரில் மட்டும் புதிய தார் எஸ்யூவிக்கு மஹிந்திரா நிறுவனம் பெற்ற மொத்த முன்பதிவுகளின் எண்ணிக்கை 20 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அபரிமிதமான டிமாண்ட் காரணமாக புதிய தலைமுறை மஹிந்திரா எஸ்யூவி காரின் ஒரு சில வண்ண தேர்வுகள் மற்றும் வேரியண்ட்களுகான காத்திருப்பு காலம் 10 மாதங்கள் வரை உயர்ந்தது. எனவே காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக தார் எஸ்யூவியின் உற்பத்தியை மஹிந்திரா நிறுவனம் அதிரடியாக உயர்த்தியது.

ஒரு மாதத்திற்கு 2,000 யூனிட்கள் என்ற அளவில் இருந்த உற்பத்தி கடந்த ஜனவரி மாதம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதாவது ஒரு மாதத்திற்கு சுமார் 3,000 யூனிட்களாக உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. ஆனால் புதிய தார் எஸ்யூவிக்கு இன்னும் டிமாண்ட் வலுவாக அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய முன்பதிவுகள் புதிய தார் எஸ்யூவிக்கு குவிந்துள்ளன.

இதில், சுமார் 25 சதவீத முன்பதிவுகள் பெட்ரோல் மாடல்களுக்கும், சுமார் 45 சதவீத முன்பதிவுகள் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களுக்கும் கிடைத்துள்ளன. கடந்த பிப்ரவரி 1ம் தேதி நிலவரப்படி, புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு குவிந்துள்ள மொத்த முன்பதிவுகளின் எண்ணிக்கை 38,500க்கும் அதிகமாக உள்ளது.

எனவே காத்திருப்பு காலத்தை குறைத்து, வாடிக்கையாளர்களுக்கு முடிந்த வரை விரைவாக டெலிவரி செய்யும் நோக்கில், புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த முடிவு புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

புதிய தலைமுறை தார் மட்டுமல்லாது, தேவைக்கு ஏற்ப எக்ஸ்யூவி300 மற்றும் பொலிரோ ஆகிய கார்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் தற்போது ஒரு சில முக்கியமான உதிரிபாகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவது, மஹிந்திரா நிறுவனத்திற்கு முன்பு உள்ள மிகப்பெரிய சவால் ஆகும்.

முக்கியமான உதிரி பாகங்கள் நிலவும் பற்றாக்குறையால் மஹிந்திரா நிறுவனம் மட்டுமல்லாது, ஏராளமான முன்னணி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில், புதிய தலைமுறை ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவி கார்களையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








