உற்பத்தியை அதிகரித்தும் மாளவில்லை... குவியும் புக்கிங்... புதிய உச்சத்தில் மஹிந்திரா தார் வெயிட்டிங் பீரியட்!
மஹிந்திரா தார் எஸ்யூவியின் உற்பத்தி மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து புக்கிங் குவிந்து வருவதால், வெயிட்டிங் பீரியட் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பார்த்தவுடனே பற்றிக் கொள்ளும் வகையிலான இதன் ஆளுமையான டிசைனை பார்க்கும் வாடிக்கையாளர் அனைவரையும் வசியம் செய்துவிட்டது. அதற்கு ஏற்ப சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள், சொகுசு அம்சங்கள் ஆகியவை இதற்கு வலு சேர்த்துவிட்டன.

இதனால், மஹிந்திரா நிறுவனமே எதிர்பாராத வகையில் வாடிக்கையாளர்கள் புதிய தார் எஸ்யூவியை முண்டியடுத்து புக்கிங் செய்து வருகின்றனர். இதனால், நாளுக்கு நாள் மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு புக்கிங் குவிந்ததுடன், காத்திருப்பு காலமும் பல மாதங்கள் நீண்டுவிட்டது.

இந்த நிலையில், புக்கிங் எண்ணிக்கையை வைத்து கடந்த நவம்பரில் தார் எஸ்யூவியின் உற்பத்தி மாதத்திற்கு 1,000 யூனிட்டுகள் என்ற எண்ணிக்கையில் இருந்து 2,000 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனாலும், மாதத்திற்கு கிட்டத்தட்ட 6,000 புக்கிங் என்ற அளவில் சென்றதால் மஹிந்திராவுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த மாதம் 2,000 யூனிட்டிலிருந்து 3,000 யூனிட்டுகளாக உற்பத்தி மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கடந்த மாதத்தில் மட்டும் 6,000 பேர் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 1ந் தேதி நிலவரப்படி, புதிய தார் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டத்தில் இருந்து 38,500 யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்துள்து. இதனால், வெயிட்டிங் பீரியட் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. போதாக்குறைக்கு சில முக்கிய உதிரிபாகங்கள் பெறுவதில் உள்ள தட்டுப்பாடு காரணமாகவும், உற்பத்தியை மேலும் அதிகரிப்பதில் சில சிக்கல்களும் உள்ளன.

தற்போதைய நிலையில், புதிய தார் எஸ்யூவியின் சில வேரியண்ட்டுகளுக்கு அதிகபட்சமாக 10 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், மஹிந்திரா நிறுவனம் செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கிறது.

இருப்பினும், உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தார் எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக மஹிந்திரா அதிகாரி ராஜேஷ் ஜெஜுரிகர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








