மஹிந்திரா கார்களின் விலை அதிரடியாக உயர்வு... எவ்வளவு ரூபாய் அதிகரித்துள்ளது தெரியுமா? முழு விபரம்!
மஹிந்திரா கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய விலைகளை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனையாகும் தனது அனைத்து கார்களின் விலைகளையும் உயர்த்தியுள்ளது. இதன்படி கேயூவி100, எக்ஸ்யூவி300, பொலிரோ, தார், மராஸ்ஸோ, எக்ஸ்யூவி500 மற்றும் அல்டுராஸ் ஜி4 உள்ளிட்ட கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. 49 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

முதலில் கேயூவி100 காரில் இருந்து தொடங்குவோம். இதன் பேஸ் வேரியண்ட்டின் விலை தற்போது 6.06 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 7.72 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் எக்ஸ்யூவி300 காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை தற்போது 7.96 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.94 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் பொலிரோ காரின் பேஸ் வேரியண்ட்டின் ஆரம்ப விலை 8.40 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.15 லட்ச ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தார் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டின் விலை தற்போது 12.12 லட்ச ரூபாயாகவும், டாப் வேரியண்ட்டின் விலை 14.17 லட்ச ரூபாயாகவும் உள்ளது.

அதே சமயம் மராஸ்ஸோ எம்பிவியின் பேஸ் வேரியண்ட்டின் விலை தற்போது 12.04 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 14.12 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஸ்கார்பியோ எஸ்யூவியின் ஆரம்ப விலை 12.32 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 17.02 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டின் விலை 15.53 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 20.04 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் ஆரம்ப விலை 28.74 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 31.74 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். உற்பத்தி செலவு அதிகரித்துள்ள காரணத்தால், மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் விலைகளை உயர்த்தியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விற்பனையை பாதிக்கும் அளவிற்கு இந்த விலை உயர்வு இல்லை என்றே கூறலாம்.

இதற்கிடையே மஹிந்திரா நிறுவனம் செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு நீண்ட காத்திருப்பு காலம் நிலவி வருகிறது.

ஆனால் மஹிந்திரா மட்டுமல்லாது, பல்வேறு முன்னணி நிறுவனங்களும் செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் செமி கண்டக்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனுடன் கோவிட்-19 இரண்டாவது அலையும் சேர்ந்து கொண்டுள்ளதால், கார்களின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








