போட்டியாளர்களை ஒரு கை பார்க்க முண்டாசு கட்டிய மஹிந்திரா... 9 புதிய எஸ்யூவிகளை களமிறக்க மெகா திட்டம்!
இந்தியாவில் 9 புதிய எஸ்யூவி கார்களை களமிறக்க மஹிந்திரா மெகா திட்டம் போட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட் என்ற பெருமையை மஹிந்திரா நிறுவனம் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கும், பட்ஜெட்டிற்கும் ஏற்றவாறு பல்வேறு ரகங்களில் எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வருகிறது. எனினும், இப்போது அனைத்து கார் நிறுவனங்களுமே எஸ்யூவி தயாரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து புதிய மாடல்களை வரிசை கட்டி வருவதால், மஹிந்திராவுக்கு பெரும் சவால் எழுந்துள்ளது.

இந்த சவால்களை முறியடிக்கும் வகையில், மெகா திட்டம் ஒன்றை வகுத்துள்ளது மஹிந்திரா. இதன்படி, வரும் 2026ம் ஆண்டுக்குள் 9 புதிய எஸ்யூவி மாடல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இந்த 9 புதிய எஸ்யூவி மாடல்களில் 6 மாடல்கள் பேட்டரியில் இயங்கும் வெர்ஷனிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் எக்ஸ்யூவி700, W620, V201, XUV300, Born EV1, Born EV2 ஆகிய மாடல்கள் அடங்கும்.

மேலும், Born EV1 மற்றும் Born EV2 ஆகிய இரண்டு மாடல்களும் மின்சார மாடல்களாக வரும் 2025- 26ம் ஆண்டு காலக் கட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதாவது, ஒரே ஆண்டில் இந்த இரண்டு மாடல்களையும் களமிறக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

இதுதவிர்த்து, எக்ஸ்யூவி700, W620, V201 மற்றும் புதிய தலைமுறை எக்ஸ்யூவி300 ஆகிய மாடல்களும் மின்சார வெர்ஷனிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், மாசு உமிழ்வு பிரச்னையை தவிர்க்கும் வகையில், இடைக்கால தீர்வாக மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்திலும் இந்த மாடல்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த பட்டியலில் முதல் மாடலாக எக்ஸ்யூவி700 எஸ்யூவி இந்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு மாற்றாக இந்த புதிய மாடல் களமிறக்கப்படும். இந்த புதிய மாடலில் தானியங்கி முறையில் இயங்கும் தொழில்நுட்ப அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்பட உள்ளன. 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெற இருக்கிறது.

புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவியைத் தொடர்ந்து புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே இந்த புதிய ஸ்கார்ப்பியோவை எதிர்பார்க்கலாம். டிசைன் மற்றும் எஞ்சின் அனைத்திலும் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் புதிய ஸ்கார்ப்பியோவிலும் வழங்கப்படும். இதுதவிர்த்து, புதிய தார் எஸ்யூவியின் 5 டோர் மாடலையும் மஹிந்திரா உறுதி செய்திருக்கிறது. ஹார்டு டாப் வெர்ஷனில் 5 டோர் தார் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

இதில், W620, V201 மற்றும் புதிய எக்ஸ்யூவி300 ஆகிய மாடல்கள் வரும் 2024ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது. இவை மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கும். W620 மாடலானது கூபே ரக எஸ்யூவி மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








