கொரோனா கோரத்தாண்டவம்... ஏப்ரல் மாதத்தை 'தம்' கட்டி கடந்த கார் நிறுவனங்கள்!
கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஏப்ரல் மாதத்தை கார் நிறுவனங்கள் தம் கட்டி கடந்துள்ளன. சில முன்னணி நிறுவனங்களின் விற்பனையில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை
கொரோனா காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரலில் முழுமையான லாக்டவுன் அமலில் இருந்ததால், கார் நிறுவனங்களின் விற்பனை வரலாறு காணாத வகையில் பூஜ்யமாக பதிவானது. இந்த நிலையில், இந்த ஆண்டும் மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் தீயாக பரவி வருகிறது.

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
இருப்பினும், பொருளாதாரத்தை கருத்தில்கொண்டு முழுமையான லாக்டவுனை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. இதனால், வாகன விற்பனை தொடர்ந்து நடைபெற்றது. இருப்பினும், சில இடங்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் சில நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவில் விற்பனையில் பாதிப்பை சந்தித்துள்ளன.

மாருதி சுஸுகி கார் விற்பனை
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த மாதம் 1,35,879 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. அதாவது, கடந்த மார்ச் மாதத்தில் 1,46,203 வாகனங்களை மாருதி விற்பனை செய்த நிலையில், கடந்த மாதம் 7.1 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் கார் விற்பனை
சென்னையில் தொழிற்சாலைகளை அமைத்து கார் உற்பத்தி செய்து வரும் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் 59,203 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 64,621 கார்களை விற்பனை செய்திருந்த ஹூண்டாய், கடந்த மாதம் 8 சதவீதம் அளவுக்கு விற்பனை சரிந்துள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் தருண் கார்க் கூறுகையில்,"ஏப்ரலில் சாதகமான விற்பனையை பதிவு செய்துள்ளோம். எனினும், இந்த சவாலான தருணத்தில், தேசத்தின் நலனுக்கு துணை நிற்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் வழங்குவோம்," என்று தெரிவித்துள்ளார்.

டாடா கார் விற்பனை
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதம் 25,095 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 29,654 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மாதம் விற்பனை 15 சதவீதம் குறைந்துள்ளது.

மஹிந்திரா கார் விற்பனை
நாட்டின் மற்றொரு உள்நாட்டு வாகனத் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கடந்த ஏப்ரலில் 18,285 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 16,700 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மாதம் மஹிந்திராவின் விற்பனை 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் பல பகுதிகளில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் இருப்பதால், உதிரிபாகங்கள் சப்ளை பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து தேவை சிறப்பாக உள்ளது. சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது," என்று மஹிந்திரா அதிாரி வீஜே நக்ரா கூறி இருக்கிறார்.

ஹோண்டா கார் விற்பனை
ஹோண்டா கார் நிறுவனமும் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் 9,072 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 7,103 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், ஏப்ரலில் ஹோண்டா கார் விற்பனை 28 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஹோண்டா அதிகாரி ராஜேஷ் கூறுகையில்,"வர்த்தகம் மற்றும் டெலிவிரிப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், நம் நாட்டு மக்கள் பலரும் உடல்நலப் பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, உடல்நலத்தை தவிர்த்து மற்ற எதுவும் முக்கியம் இல்லை," என்று தெரிவித்துள்ளார்.

டொயோட்டா கார் விற்பனை
டொயோட்டா கார் நிறுவனம் கடந்த ஏப்ரலில் 9,622 கார்களை விற்பனை செய்துள்ளது. பல சவால்கள் இருந்தபோதும், தனிநபர் வாகனங்களுக்கு நல்ல டிமான்ட் உள்ளது. இதனால், எங்களது விற்பனை ஏப்ரலில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது," என்று டொயோட்டா அதிகாரி நவீன் சோனி தெரிவித்துள்ளார்.

கியா கார் விற்பனை
கியா நிறுவனத்தின் விற்பனை ஏப்ரல் மாதத்தில் 16 சதவீதம் சரிவை கண்டுள்ளது. கடந்த மாதம் 16,111 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 19,100 கார்களை விற்பனை செய்த கியா நிறுவனம், கடந்த மாதம் 16 சதவீத சரிவை கண்டுள்ளது.

கார் தொழிற்சாலைகள் மூடல்
கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் தீவிர கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், கார் தொழிற்சாலைகள் மற்றும் அது சார்ந்த உதிரிபாகங்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக ஆலைகளை தற்காலிகமாக மூடுவதற்கும் மாருதி உள்ளிட்ட வாகன நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

விற்பனை பாதிக்க வாய்ப்பு
கார் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்படுவதும், உற்பத்தி குறைக்கப்படுவதன் காரணமாக, இந்த மாதத்தில் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இருப்பில் வைக்கப்பட்டு இருக்கும் கார்களை வைத்து இந்த மாதத்தை கடப்பதற்கு பல நிறுவனங்கள் திட்டம் போட்டு செயலாற்றி வருகின்றன.


Click it and Unblock the Notifications








