ஆக்சிஜன் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி இலவசம்: மேப் மை இந்தியா சூப்பர் அறிவிப்பு!
ஆக்சிஜன் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவியை இலவசமாக வழங்குவதாக மேப் மை இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலமாக, ஆக்சிஜன் வாகனங்களை நிகழ்நேர முறையில் கண்காணிக்க வாய்ப்பு கிடைக்கும்.

நாடுமுழுவதும் பல இடங்களில் கொரொனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. குறிப்பாக, தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஆக்சிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

இதனால், தேவைக்கும் உற்பத்திக்குமான விகிதத்தில் பெரும் வித்தியாசம் ஏற்பட்டுள்ளதால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் அவல நிலையும் காணப்படுகிறது.

ஆக்சிஜன் சப்ளையை சரிசெய்வதற்கான முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் இணைந்து தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இந்த நிலையில், ஆக்சிஜன் தேவை மிக அதிகமாக இருப்பதுடன், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளையை எதிர்பார்த்து நோயாளிகளும், உறவினர்களும் காத்துக் கிடக்கின்றனர்.

இந்த சூழலில், உயிர் காக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்களின் நகர்வுகளை துல்லியமாக தெரிந்துகொள்ளும் வகையில், ஜிபிஎஸ் கருவிகளை இலவசமாக வழங்குவதாக மேப் மை இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தகவலை மேப் மை இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ரோஹன் வர்மா சமூக வலைத்தளம் மூலமாக தெரிவித்துள்ளார். வாகனம் எங்கு இருக்கிறது, எவ்வளவு நேரத்தில் வந்தடையும் உள்ளிட்ட பல விபரங்களை நிகழ்நேர முறையில் கண்காணிப்பதற்கு இந்த ஜிபிஎஸ் கருவி உதவும். மருந்துவ உபகரங்கணங்கள் மற்றும் ஆக்சிஜன் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பெறுவோர் இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனங்களை எளிதாக கண்காணிக்க முடியும்.

ஆக்சிஜன் வாகனங்களில் இந்த ஜிபிஎஸ் கருவியை பொருத்துவதற்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மேலும், சில இடங்களில் ஆக்சிஜன் வாகனங்களை வழிமறிக்கும் நிலையும் உள்ளது. இந்த ஜிபிஎஸ் கருவி மூலமாக வாகனத்தின் இருப்பிடத்தை எளிதாக தெரிந்து கொள்வதற்கும், தாமதம் குறித்த தகவல்களை பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து கூட அதிக அளவில் இந்த கருவியை பெறுவதற்கு பலர் தொடர்பு கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர்த்து, கொரோனா சோதனை மையங்கள், சிகிச்சை மையங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தடுப்பூசி செலுத்தப்படும் மையங்கள் குறித்த தகவல்களையும் தனது செயலியில் மேப் மை இந்தியா வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








