டொயோட்டா பெல்டா அதிகாரப்பூர்வ வெளியீடு... ஏதோ புது மாடல்னு நினைச்சுடாதீங்க... இது மாருதி சியாஸ்!
டொயோட்டா (Toyota) நிறுவனம் பெல்டா (Belta) செடான் ரக கார் மாடலை மத்திய கிழக்கு சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்திருக்கின்றது. இந்த கார் பற்றி அறிய வேண்டிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டொயோட்டா (Toyota) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதன் பெல்டா (Belta) செடான் ரக காரை வெளியீடு செய்திருக்கின்றது. மத்திய கிழக்கு வாகன சந்தையிலேயே இக்கார் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்திய சந்தையையும் இந்த கார் வந்தடைய இருக்கின்றது. இக்காரின் மீதான எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் வலுப் பெற்று வரும் நிலையில் மத்திய கிழக்கு சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

டொயோட்டா பெல்டா காரை பார்க்கும்போது இந்த காரையே வேறு ஏதோ நிறுவனத்தின் பிராண்டில் பார்த்திருக்கின்றோமே என்று நினைக்கு தோன்றும். ஆம், இந்த கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் (Maruti Ciaz) கார் மாடல் ஆகும். இதனையே நிறுவனம் தற்போது ரீபேட்ஜ் செய்து (தன்னுடைய பிராண்டின்கீழ்) களமிறக்கி இருக்கின்றது.

Source: Team bhp
மத்திய கிழக்கு சந்தையை தொடர்ந்து இந்தியாவில் அடுத்த ஆண்டு இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஏற்கனவே, நிறுவனம் டொயோட்டா யாரிஸ் கார் மாடலை விற்பனையில் இருந்து வெளியேற்றிவிட்டது. இதன் இடத்தை நிரப்பும் வகையில் விரைவில் நிறுவனம் பெல்டாவை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

சுசுகி சியாஸாக விற்பனைக்குக் கிடைத்தபோது காணப்பட்டதைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பு வசதிகளுடன் பெல்டா விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதன் கேபினில் 7 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், நடுத்தர டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், பவர் விண்டோக்கள், க்ரூஸ் கன்ட்ரோல், பவரால் கட்டுப்படுத்தக் கூடிய ரியர்வியூ கண்ணாடிகள் மற்றும் சாவியில்லா நுழைவு என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் இடம் பெற இருக்கின்றன.

டொயோட்டா பெல்டா காரில் நிறுவனம் அதன் 1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு இன்லைன் 4 பெட்ரோல் எஞ்ஜினை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 105 பிஎஸ் மற்றும் 138 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இத்துடன், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் வசதியும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. இது மத்திய கிழக்கு சந்தைக்கான ஸ்பெக் மாடலின் எஞ்ஜின் வசதியாகும்.

இந்திய சந்தையில் இதே எஞ்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையிலான டிரான்ஸ்மிஷனுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. ஆகையால், இந்தியர்களைக் கவரும் விதமாகவே டொயோட்டா இந்த விஷயத்தில் சமரசம் இன்றி 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டொயோட்டா நிறுவனம் இதுபோன்று மாருதி சுசுகியின் தயாரிப்பை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்வது இது முதல் முறையல்ல. முன்னதாக நிறுவனம் பலினோ (Maruti Baleno) கார் மாடலை கிளான்ஸா (Glanza) என்ற பெயரிலும், விட்டாரா ப்ரெஸ்ஸா (Vitara Brezza)-வை, அர்பன் க்ரூஸர் (Urban Cruiser) என்ற பெயரிலும் நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கியது.

இதைத் தொடர்ந்து, இந்திய சந்தையில் புதிய பெல்டாவையும் களமிறக்கும் முனைப்பில் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இதன் வருகையை முன்னிட்டே மிக சமீபத்தில் அதன் பிரபலமான யாரிஸ் செடான் ரக காரை இந்தியாவை விட்டு வெளியேற்றியது. பெல்டா என்ற பெயரில் வரும் சியாஸ் பன்முக வெளிப்புற தோற்றத்தைப் பெற்று விற்பனைக்கு வர இருக்கின்றது.

குறிப்பாக, வெளிப்புற தோற்றத்தில் லேசான மாற்றங்களை அது பெற இருக்கின்றது. க்ரில் மற்றும் லோகோ விஷயத்தில் பெரிய மாற்றத்தை இது பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், மிக விரைவில் டொயோட்டா நிறுவனம் மாருதி சுசுகியின் பிரபல எம்பிவி ரக வாகனமான எர்டிகாவை (Maruti Ertiga), ருமியன் (Rumion) எனும் பெயரில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதன் அறிமுகமும் மிக விரைவில் நாட்டில் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








