நேரடியாக-வாடிக்கையாளர் தளத்தின்கீழ் 1,000வது மெர்சிடிஸ் கார் விற்பனை!! கஸ்டமர்ஸ் மத்தியில் பெருகும் ஆதரவு!
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் அதன் புதிய 'எதிர்காலத்திற்கான சில்லறை வணிகம்' என்ற விற்பனை தளத்தினை கடந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இந்த சில்லறை விற்பனை தளத்தின் கீழ் கார்கள் விற்பனையில் 1000 என்ற மைல்கல்லை கடந்துள்ளதாக மெர்சிடிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவில் அதன் அங்கரீக்கப்பட்ட டீலர்களுக்கு கடைசியாக கடந்த அக்டோபரில் காரினை விற்பனை செய்தது. ஏனெனில் அதன்பின்பே, ‘எதிர்காலத்திற்கான சில்லறை வணிகம்' என்ற நேரடி-வாடிக்கையாளர் விற்பனை திட்டத்தினை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய திட்டத்தினால், மெர்சிடிஸ்-பென்ஸ் கார் விற்பனையின் போது டீலர்கள் வசூலிக்கும் கட்டணம் குறைந்தது. தற்போது டெஸ்ட் ட்ரைவ்களுக்கும், வாகன டெலிவிரிகளுக்கும் மட்டுமே மெர்சிடிஸின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் கட்டணத்தை வசூலிக்கின்றனர். அதாவது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் கார்களை விற்பனை செய்ய நேரடியாகவே வாடிக்கையாளர்களுடன் வணிகம் செய்கிறது.

இந்த புதிய செயல்பாட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு முழுமையாக 1 மாதம் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் 1000 கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை மெர்சிடிஸ் கடந்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 1000வது மெர்சிடிஸ்-பென்ஸ் காராக ஏ-கிளாஸ் லிமௌசைன் சமீபத்தில் டெல்லியில் வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சுமார் 4,101 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து மெர்சிடிஸ் நிறுவனம் ஒரு வலுவான நிலையில் இருந்தது. அதனை தொடர்ந்து நடப்பு காலாண்டர் ஆண்டின் நான்காம் & கடைசி காலாண்டில் ‘எதிர்காலத்திற்கான சில்லறை வணிகம்' என்ற செயல்பாட்டு திட்டத்தின் வாயிலாகவே ஆயிரத்திற்கும் அதிகமாக கார்கள் தற்போதுவரையில் விற்பனை செய்யப்பட்டிருப்பது நிச்சயம் மெர்சிடிஸ் நிறுவனத்தை உற்சாகமடைய செய்திருக்கும்.

சுருக்கமாக ROTF (Retail of the Future) எனப்படும் இந்த ‘எதிர்காலத்திற்கான சில்லறை வணிகம்' செயல்பாட்டு திட்டத்திற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்துவரும் வரவேற்பு குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ-வும், நிர்வாக இயக்குனருமான மார்டின் ஸ்வென்க் கருத்து தெரிவிக்கையில், ROTF இயக்குதளத்தின் கீழ் குறுகிய காலத்திற்குள் ஆயிரமாவது மெர்சிடிஸ்-பென்ஸ் காரை வழங்குவது வாடிக்கையாளர்களின் சிறப்பை மறுபரிசீலனை செய்வதற்கான எங்கள் பார்வையை வலுவாக உறுதிப்படுத்துகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் உடனான வாடிக்கையாளர்களின் பிணைப்பை வளப்படுத்திய இந்த புதிய சில்லறை விற்பனை அனுபவத்தின் மீது எங்கள் வாடிக்கையாளர்கள் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளதால், ROTF எங்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றார். இந்த புதிய வணிக மாதிரியின் கீழ், மெர்சிடிஸ் நாடு முழுவதும் அதன் கார்களின் முழுமையான பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறது மற்றும் நிர்வகிக்கிறது.

டீலர்கள் இனி சரக்குகளில் அதிக மூலதன முதலீடுகளை செய்ய தேவையில்லை. இது அவர்களின் வணிக நம்பத்தன்மையை மேம்படுத்துகிறது. கார்கள் & அவற்றிற்கான ஆக்ஸஸரீகளின் விலைகள் மற்றும் சலுகைகள் இப்போது மெர்சிடிஸ் நிறுவனத்தாலேயே மையமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் இனி தனிப்பட்ட டீலர்களுடன் தள்ளுபடிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது.

என்றாலும், இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான எக்ஸ்-ஷோரூம் விலைகளுக்கு இந்த செயல்பாட்டு திட்டம் உத்தரவாதம் அளிக்கிறது. மெர்சிடிஸ் டீலர்கள் இனி தங்களது கொள்முதல் அனுபவத்தின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் போட்டியிட வேண்டும். இது வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் என மெர்சிடிஸ் நம்புகிறது.

இது ஒருபுறம் இருக்க, மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் அதன் கார்களின் விலைகளை வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கார்களில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வசதிகள் மற்றும் அதிகரித்துவரும் உற்பத்தி செலவினால் மெர்சிடிஸ் கார்களின் விலைகள் அதிகப்பட்சமாக 2% வரையில் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விலை உயர்வில் அனைத்து மாடல்களும் உட்படாது எனவும், சில குறிப்பிட்ட மாடல்களின் விலைகள் மட்டுமே உயர்த்தப்பட உள்ளதாகவும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் மெர்சிடிஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு விலை பாதுகாப்பு என்ற வசதியையும் அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு அந்த வாடிக்கையாளர் இந்த 2021ஆம் ஆண்டு முடிவதற்குள் தனக்கான காரினை முன்பதிவு செய்திருக்க வேண்டுமாம்.

சில மெர்சிடிஸ் கார்களை இப்போது முன்பதிவு செய்தாலும், 2022 ஏப்ரலில் தான் டெலிவிரி பெற முடியும் என்கிற சூழல் உள்ளது. அத்தகைய வாடிக்கையாளர்களுக்கும் காரின் விலை உயர்த்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸின் ‘எதிர்காலத்திற்கான சில்லறை வணிகம்' என்ற இயக்குத்தளத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்த செயல்பாட்டு திட்டத்தினை மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கடைப்பிடிக்க முன்வரலாமா? உங்களது பதில்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications








