கொரோனா வைரசுக்கு எதிரான போர்... குஜராத்திற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் செய்த உதவி... என்னனு தெரியுமா?
எம்ஜி மோட்டார் நிறுவனம் குஜராத் மாநிலத்திற்கு தற்போது உதவி ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டர் ப்ளஸ் காரை நடமாடும் கோவிட்-19 பரிசோதனை மையமாக மாற்றியுள்ளது. நடமாடும் கோவிட்-19 பரிசோதனை மையமாக மட்டுமல்லாது, தடுப்பூசி செலுத்தும் பணிகளும் இதன் மூலமாக செய்யப்படும். குஜராத்தில் தற்போது இந்த நடமாடும் கோவிட்-19 பரிசோதனை மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பாதிப்பு இருக்கும் பகுதிகளில் ஆர்டிபிசிஆர் சோதனைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அலுவலர்களால் இந்த காரில் மாதிரிகள் சேகரிக்கப்படும். இதுகுறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜிவ் சபா கூறுகையில், ''பெருந்தொற்றில் இருந்து நாடு மீண்டு வரும் நிலையில், நடமாடும் மருத்துவ சேவைகள்தான் தற்போதைய தேவையாக உள்ளன.

எம்ஜி நிறுவனம் சார்பில் எங்களால் முயன்ற அளவிற்கு உதவி வருகிறோம். இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக முதல் ஹெக்டர் ப்ளஸ் நடமாடும் பரிசோதனை மையம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது'' என்றார். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோதும் எம்ஜி மோட்டார் நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்தது. அது இம்முறையும் தொடர்கிறது.

நடமாடும் கோவிட்-19 பரிசோதனை மையத்தை எம்ஜி நிறுவனம் ஏற்படுத்தியுள்ள ஹெக்டர் ப்ளஸ், இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்றாகும். எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் அடிப்படையில் ஹெக்டர் ப்ளஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 6 மற்றும் 7 சீட்டர் மாடல்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கிடைக்கிறது.

புதிய டாடா சஃபாரி, மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் மட்டுமல்லாது, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காருக்கும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் விற்பனையில் சவால் அளித்து வருகிறது. மேலும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காருடனும், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் போட்டியிடும்.

ஹூண்டாய் கிரெட்டா 5 சீட்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷன்தான் அல்கஸார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் 18ம் தேதி ஹூண்டாய் அல்கஸார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. சரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கு வருவோம். இதில், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

இதில், டீசல் இன்ஜின் 2.0 லிட்டர் யூனிட் ஆகும். அதே சமயம் பெட்ரோல் இன்ஜின் 1.5 லிட்டர் யூனிட் ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என இரண்டு தேர்வுகளும் வழங்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை போல், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

உட்புறத்தில் விசாலமான இட வசதியை எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் பெற்றுள்ளது. எனவே பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக இது இருக்கும். ஹெக்டர் ப்ளஸ் தவிர, ஹெக்டர், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, க்ளோஸ்ட்டர் உள்ளிட்ட கார்களையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








