செய்தி தெரியுமா?.. மறு பதிவிற்கான கட்டணம் பல மடங்க உயருகிறது... புலம்பி தள்ளும் மக்கள்!!
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் (MoRTH) வாகன மறு பதிவிற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பழைய வாகனங்களின் இயக்கமே இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, காற்று மாசுபாட்டை அதிகளவில் ஏற்படுத்துவதாகக் கூறப்படும் முதிர்ந்த (பழைய) வாகனங்களை ஒட்டுமொத்தமாக பயன்பாட்டில் இருந்து வெளியேற்றுகின்ற வகையிலான திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதனடிப்படையில் 2021 மத்திய பட்ஜெட்டின்போது பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம் (Vehicle Scrappage Policy) பற்றிய தகவலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதனால், 20 ஆண்டுகள் பழைய தனி-நபர் மற்றும் 15 ஆண்டுகள் வர்த்தக வாகனங்கள் ஃபிட்னஸ் சான்று பெறுவது கட்டாயமாகியுள்ளது.

இந்தநிலையில் மற்றுமொரு புதிய அதிர்ச்சி மிகுந்த தகவலை மத்திய அரசு வெளியிட்டிருக்கின்றது. அதாவது, பழைய வாகனங்களின் இயக்கத்தை சுமை மிகுந்ததாக மாற்றும் வகையில் இதன் மறு-பதிவு கட்டண தொகையை பல மடங்கு உயர்த்தியிருக்கின்றது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் (MoRTH) மறு பதிவு கட்டண உயர்வை உறுதி செய்திருக்கின்றது. இதுகுறித்து அது வெளியிட்டிருக்கும் தகவலில், 20 ஆண்டுகள் பழைய இருசக்கர வாகனத்திற்கான மறு பதிவு கட்டணம் ரூ. 1000 என்றும், 15 ஆண்டுகள் பழைய பேருந்து மற்றும் டிரக்குகளுக்கான மறு பதிவு கட்டணம் ரூ. 12,500 ஆகவும் உயர்த்தியிருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

முன்னதாக பழைய இருசக்கர வாகனத்தை மறு பதிவு செய்ய ரூ. 300 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று ஹெவி வாகனங்களின் கட்டணத்திலும் 21 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த கட்டண உயர்வு திட்டம் மத்திய மோட்டார் வாகன (திருத்த) விதிகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

அதேசமயம், பழைய வாகனங்களை வாகன அழிப்பு கொள்கையின்கீழ் தாமாக முன் வந்து ஸ்கிராப் செய்தால், அதே நபர் புதிய வாகனத்தை வாங்கும்போது எந்தவொரு கட்டணமும் இன்றி புதிய வாகனத்திற்கான பதிவு சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து, பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிக்க காலம் தாமதம் ஏற்பட்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் மாத கால தாமதத்திற்கு ரூ. 300 என்றும், மேலும், அடுத்தடுத்த மாத கால தாமதத்திற்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்க இருப்பதாகவும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இதுதவிர, ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலான ஆர்சி சான்று வழங்கப்பட இருப்பதால் அதற்கான கட்டணமாக ரூ. 200 கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியிருக்கின்றது. பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களை ஒட்டுமொத்தமாக சாலையில் இருந்து அகற்றும் நோக்கில் இத்தகைய கடுமையான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.

மிக சமீபத்தில் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவை உயர்த்துவதற்கான ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. தற்போது 90 சதவீத பெட்ரோலுக்கு 10 சதவீதம் எத்தனால் என்ற அளவுகளின் அடிப்படையிலேயே கலப்படம் செய்யப்பட்டு வருகின்றது.

இதனையே 80 சதவீதம் பெட்ரோல் - 20 சதவீதம் எத்தனால் என மாற்றியமைத்திருக்கின்றது. இதனால் கணிசமான அளவு காற்று மாசுபாட்டைக் குறைக்க முடியும் என அரசு நம்புகின்றது. இந்த நிலையிலேயே வாகனங்களின் பதிவு சான்றை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை அரசு உயர்த்தியிருக்கின்றது.

2021 அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த புதிய மறு பதிவு கட்டணம் நடைமுறைக்கு வர இருக்கின்றது. இதனால், வர்த்தக மற்றும் பழைய வாகனங்களைப் பயன்படுத்துவோர் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல் ஏற்கனவே தங்களின் வருமானத்தை பதம்பார்க்க தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையில் கூடுதல் சுமையாக இந்த கட்டண உயர்வு அமைந்திருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

2021 அக்டோபர் 1ம் தேதி முதல் எந்தெந்த வாகனத்திற்கு எவ்வளவு மறுபதிவு கட்டணம் வசூலிக்கப்பட இருக்கின்றது.
- மோட்டார் சைக்கிள் - ரூ. 1,000
- மூன்று சக்கர வாகனங்கள் அல்லது குவாட்ரி சைக்கிள் - ரூ. 3,500.
- டாக்ஸி - ரூ. 7,000
- நடுத்தர கூட் மற்றும் பயணிகள் பிரிவில் இயங்கும் வாகனங்கள்- ரூ. 10,000
- கனரக வாகனம் / பயணிகள் வாகனங்கள் 12,500 ரூபாய்.


Click it and Unblock the Notifications








