டாடா நானோ எலெக்ட்ரிக் கார்களுடன் பெங்களூரில் புதிய டாக்சி சேவை!
பெங்களூர் நகரில் நானோ எலெக்ட்ரிக் கார்களுடன் புதிய டாக்சி சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய டாக்சி சேவை குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மதர்பாட் இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் இந்த புதிய டாக்சி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த டாக்சி நிறுவனத்தை நடத்துகின்றனர். ஆட்டோரிக்ஷாக்களுக்கு மாற்றாக பாதுகாப்பான அதேநேரத்தில், மாசு உமிழ்வு இல்லாத டாக்சி சேவையை வழங்கும் விதத்தில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
செயினிக்பாட் சிட் அண்ட் கோ என்ற பெயரில் இந்த டாக்சி சேவை பெயரிடப்பட்டுள்ளது. ஓலா, உபர் போன்று ஸ்மார்ட்ஃபோன் மூலமாக புக்கிங் செய்யும் வசதி இல்லாமல், சாலையில் செல்லும்போது ஆட்டோரிக்ஷா போலவே, கை சமிக்ஞை மூலமாக இந்த டாக்சி சேவையை பெற முடியும். மொபைல்போன் மூலமாக புக்கிங் செய்து காத்திருக்கும் நேரத்தை இந்த டாக்சி சேவை மூலமாக தவிர்க்க முடியும் என்று மதர்பாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக இந்த டாக்சி சேவையில் பயன்படுத்தப்படும் டாடா நானோ எலெக்ட்ரிக் கார்களின் கூரையில் சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. பச்சை விளக்கு எரிந்தால், உள்ளே பயணிகள் இல்லை, டாக்சியை அழைக்கலாம் என்று பொருள் கொள்ளலாம். உள்ளே பயணிகள் இருந்தால் சிவப்பு விளக்கு எரியும்.
காரில் ஏறியவுடன் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து பயணத்தை துவங்க முடியும். இந்த டாக்சி சேவை மிகவும் பாதுகாப்பானதாகவும், அவசரத்திற்கான விசேஷ தொலைபேசி எண்ணுடன் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா பிரச்னையை கருத்தில்கொண்டு ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு தடுப்புகளும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கட்டுப்பாட்டு அறை மூலமாக அனைத்து கார்களையும் நிகழ்நேர முறையில் கண்காணிக்கப்படும். ஸ்பீடு கவர்னர் பொருத்தப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட வேகத்தை தாண்டி ஓட்டுனர் செலுத்த முடியாது. அவசர கால அழைப்புக்கான பட்டனும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டாக்சி சேவைக்காக மின்சார வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. மாசு உமிழ்வு இல்லாத போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இந்த முடிவை மதர்பாட் நிறுவனம் எடுத்துள்ளது.
இதற்காக, டாடா நானோ காரில் பேட்டரி மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது. எலெக்ட்ரா இவி நிறுவனம் நானோ காரை மின்சார வாகனமாக மாற்றிக் கொடுத்துள்ளது.
ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை இந்த நானோ எலெக்ட்ரிக் கார்கள் பயணிக்கும். பெங்களூர் நகரம் முழுவதும் தனது நானோ எலெக்ட்ரிக் டாக்சி கார்களுக்காக பிரத்யேக சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கவும் மதர்பாட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஹைதராபாத், டெல்லி, மும்பை நகரங்களிலும் தனது டாக்சி சேவையை வழங்கவும் மதர்பாட் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் இந்த சேவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








