யூனிட்டிற்கு 15 ரூபாயாம்!! மும்பையின் முதல் பொது இவி சார்ஜிங் நிலையம், அமைச்சர் திறந்து வைத்தார்
மும்பையில் முதல் பொது எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இவி சார்ஜிங் நிலையத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய போக்குவரத்து மின்சாரமயமாதலுக்கு மாறி வருவது ஒவ்வொரு நாளும் சாலையில் அதிகரித்து வரும் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது தெரிய வருகிறது. இருப்பினும் இந்த மாற்றம் சற்று மெதுவாகவே நிகழ்ந்து வருகிறது.

ஆனால் நிச்சயம் ஒரு நாள் முழுவதுமாக நிகழ்ந்துவிடும். அதற்கு இப்பொழுதில் இருந்தே தயாராகினால் தானே சரியாக இருக்கும். இந்த வகையில் தான் பிரஹன் மும்பை மாநகராட்சி பொது எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையத்தை கட்டமைத்து தற்போது திறந்து வைத்துள்ளது. இதுதான் மும்பையின் முதல் பொது இவி சார்ஜிங் நிலையமாகும்.

மும்பையில் தாதர் பகுதியில் கோகினூர் கட்டடத்தின் பார்க்கிங் பகுதியில் இந்த சார்ஜிங் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு நிகழ்ச்சியில் மஹாராஷ்டிரா மாநில சுற்றுச்சூழல் அமைச்சரும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே கலந்து கொண்டு, நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த சார்ஜிங் நிலையத்தில் ஒரே நேரத்தில் மொத்தம் 7 எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யலாம். இவ்வாறு பொது பார்க்கிங் பகுதியில் இவி சார்ஜிங் நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளது மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே இதுதான் முதல்முறையாகும்.

இந்த எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையம் வாரத்தில் ஏழு நாட்களிலும் 24 மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மொத்த ஏழு சார்ஜர்களில் நான்கு சார்ஜர்கள் விரைவு சார்ஜர்களாகும். அதவாது இவற்றில் எலக்ட்ரிக் கார்களை ஒன்றில் இருந்து ஒன்றரை மணிநேரத்தில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிடலாம்.
மற்ற மூன்று வழக்கமான சார்ஜர்கள் ஆகும். இதில் எலக்ட்ரிக் கார் ஒன்றை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப சுமார் 6 மணிநேரங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் நிரப்ப 1 யூனிட்டிற்கு ரூ.15 கட்டணமாக வசூலிக்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்ய தாக்கரே இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கங்களில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும் இந்த சார்ஜி நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில், நாங்கள் மாநிலத்தின் எலக்ட்ரிக் வாகன கொள்கையை ஒரு மாதத்திற்கு முன்பு அறிவித்திருந்தோம். எல்லா முனைகளில் இருந்தும் இதுபோன்ற முயற்சிகளை காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாநிலத்தின் நலனுக்காக அரசாங்கம் எடுக்கும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்கள் காலத்தின் தேவையாக, பிரஹன் மும்பை மாநகராட்சி தனது சட்ட அதிகாரத்திற்குள் இவ்வாறான இவி சார்ஜிங் நிலையங்களை மாநகரத்தில் மேலும் பல பகுதிகளில் நிறுவவும் கார்பிரேஷனை அமைச்சர் கேட்டு கொண்டுள்ளார்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் பேசுகையில், அதிக எண்ணிக்கையிலான மின்சார வாகனங்கள் உள்ள பகுதிகளில், சார்ஜிங் நிலையங்களை தொடங்க முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இது சம்பந்தமாக ஒரு விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, புதிய புதிய சார்ஜிங் நிலையங்கள் வாகன நிறுத்துமிடங்களில் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மஹாராஷ்டிரா மாநில அரசாங்கம் மட்டுமின்றி, எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்கப்படுத்த மத்திய அரசாங்கமும் பல விதமான நடவடிக்கைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. இதன்படி சமீபத்தில் ஃபேம்-2 திட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
இவற்றுடன் மாநில அரசாங்கங்களும் தனித்தனியாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியங்களை அறிவித்து வருகின்றன. குறிப்பாக குஜராத் மாநில அரசு மிக பெரிய அளவிலான ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளன.

இதுவே புதிய புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்ச்சியாக படையெடுத்து வருவதற்கு காரணமாக உள்ளது. சமீபத்தில், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தின்போது கூட Ola S1 மற்றும் Simple One என்ற இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் Ola இ-ஸ்கூட்டர் நமது தமிழகத்தில் தான் தயாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








