வாங்க தயார் ஆகுங்க... புதிய தலைமுறை கியா கார்னிவல் இந்திய சந்தைக்கு எப்போது வருகிறது தெரியுமா?
புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை கியா கார்னிவல் கார், இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என இணையத்தில் தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய தலைமுறை கார்னிவல் பிரீமியம் எம்பிவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வது தொடர்பாக கியா நிறுவனம் தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக, இந்தியாவிற்கான அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கியா நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் களமிறங்கியது. செல்டோஸ் எஸ்யூவிதான் கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார். செல்டோஸ் எஸ்யூவிக்கு இந்தியர்கள் வழங்கி வரும் பிரம்மாண்ட வரவேற்பை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இதன்பின் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் கார்னிவல் பிரீமியம் எம்பிவியை கியா நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா கார்னிவல் எம்பிவி காருக்கு நேரடி போட்டி என எந்த காரும் இல்லை. எனினும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் டாப் வேரியண்ட்களுக்கு கியா கார்னிவல் விற்பனையில் சவால் அளித்து வருகிறது.

புதிய தலைமுறை கியா கார்னிவல் எம்பிவி கடந்த ஆண்டின் மத்தியில் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதலே இந்தியாவிலும் புதிய தலைமுறை கியா கார்னிவல் விற்பனைக்கு வரலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன. புதிய பிளாட்பார்ம் அடிப்படையில், புதிய தலைமுறை கியா கார்னிவல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும் புதிய தலைமுறை மாடல் நீளமாகவும், அகலமாகவும் மற்றும் உயரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உட்புறத்தில் இடவசதியும் அதிகரித்துள்ளது. அதேபோன்று வீல்பேஸ் நீளமும் 30 மிமீ அதிகரிக்கப்பட்டு தற்போது 3,090 மிமீ-ஆக இருக்கிறது.

மேலும் வெளிப்புற தோற்றத்தையும் கியா நிறுவனம் முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தவுடன் பல்வேறு விதமான இருக்கை தேர்வுகளுடன் புதிய தலைமுறை கியா கார்னிவல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய தலைமுறை கியா கார்னிவல் எம்பிவியில் பல்வேறு ஹைலைட்கள் இருக்கின்றன.

இதில், புதிதாக வடிவமைக்கப்பட்ட முன் பக்க க்ரில் அமைப்பு, புத்தம் புதிய டெயில் லேம்ப்கள், புதிய ஸ்டியரிங் வீல், மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. அதே சமயம் இந்திய சந்தையில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் தொடர்ந்து வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசி கொண்டிருப்பதால், பல்வேறு புதிய கார்களின் அறிமுகம் தொடர்ச்சியாக தள்ளி போய் கொண்டுள்ளது. எனவே இந்த பிரச்னை ஓய்ந்த பிறகு, அடுத்த ஆண்டு ஏதேனும் ஒரு சமயத்தில் புதிய தலைமுறை கியா கார்னிவல் காரை இந்தியாவிற்கு கொண்டு வருவது சரியான முடிவாக இருக்கும். இதுகுறித்து காடிவாடி செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








