செமி கண்டக்டர்கள் பற்றாக்குறையால் தடுமாறும் மஹிந்திரா... ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி500 அறிமுகத்தில் அதிரடி மாற்றம்
புதிய தலைமுறை ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்களின் அறிமுகத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள தனது தயாரிப்புகளின் புதிய தலைமுறை மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதன்படி தார் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே விற்பனைக்கு கொண்டு வந்து விட்டது.

இதற்கு அடுத்தபடியாக ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்களின் புதிய தலைமுறை மாடல்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 2 எஸ்யூவிக்களும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதில், புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவியை மஹிந்திரா வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே சமயம் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவி வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு முன்பாக, எக்ஸ்யூவி500 எஸ்யூவிதான் விற்பனைக்கு வரும் எனவும், அதன் பின்னர்தான் ஸ்கார்பியோ விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதாவது புதிய எக்ஸ்யூவி500 எஸ்யூவி 2021ம் ஆண்டின் மத்தியிலும், புதிய ஸ்கார்பியோ எஸ்யூவி 2021ம் ஆண்டின் நான்காவது காலாண்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஸ்கார்பியோதான் முதலாவதாக விற்பனைக்கு வரும் எனவும், அதற்கு பிறகுதான் எக்ஸ்யூவி500 அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது.

செமி கண்டக்டர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைதான் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கும் என தெரிகிறது. தற்போது உலகம் முழுவதும் செமி கண்டக்டர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இது மஹிந்திரா நிறுவனத்திற்கு மட்டுமான பிரச்னை கிடையாது.

புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நிறைய செமி கண்டக்டர்கள் தேவை. ஏனெனில் இது அதிக வசதிகளையும், எலெக்ட்ரிக்கல் உபகரணங்களையும் கொண்டது. ஆனால் ஸ்கார்பியோவோ, எக்ஸ்யூவி500 எஸ்யூவி அளவிற்கு வசதிகள் நிரம்பியது கிடையாது. எனவே ஸ்கார்பியோவிற்கு குறைந்த அளவு செமி கண்டக்டர்கள் இருந்தாலே போதுமானது.

எனவேதான் ஸ்கார்பியோவை முதலில் அறிமுகம் செய்து விட்டு, அதன்பின் எக்ஸ்யூவி500 எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வரலாம் என மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் டெலிவரி தாமதமாகி வருவதற்கு செமி கண்டக்டர்களின் பற்றாக்குறைதான் முக்கியமான காரணமாக உள்ளது.

தார் எஸ்யூவியை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பலர் டெலிவரி பெறுவதற்காக நீண்ட காலமாக காத்து கொண்டுள்ளனர். எக்ஸ்யூவி500 விஷயத்திலும் அந்த பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மஹிந்திரா நிறுவனம் உறுதியாக உள்ளது. இதன் காரணமாக ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்களின் அறிமுகத்தில் மஹிந்திரா மாற்றங்களை செய்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications








